“பயப்படாதீங்க… செக் பண்ணுங்க!” – ஒரு சின்ன டெஸ்ட் உங்கள் உயிரையே காப்பாற்றும்!

Published On:

| By Santhosh Raj Saravanan

world cancer day 2026 united by unique theme screening tests save lives

“எனக்கு உடம்புல ஒரு பிரச்சனையும் இல்லை, அப்புறம் எதுக்கு நான் ஆஸ்பத்திரிக்கு போகணும்?” – இதுதான் நம்மில் பலரும் கேட்கும் கேள்வி. ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை, வலி வந்த பிறகு மருத்துவமனைக்குச் செல்வது என்பது, திருடன் போன பிறகு கதவைப் பூட்டுவது போன்றது.

இன்று (பிப்ரவரி 4, 2026) உலகப் புற்றுநோய் தினம் (World cancer Day). இந்த ஆண்டின் மையக்கருத்து (Theme) “United by Unique” என்பதாகும். அதாவது, ஒவ்வொருவரின் புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது; ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இதை வெல்ல முடியும்.

ADVERTISEMENT

இந்த நாளில், நாம் அடிக்கடி தள்ளிப்போடும் சில எளிய பரிசோதனைகள் (Screening Tests) எப்படி நம் உயிரைக் காப்பாற்றும் என்பதைப் பார்ப்போம்.

ஏன் தள்ளிப்போடுகிறோம்? பலர் பயத்தின் காரணமாகவே மருத்துவப் பரிசோதனைகளைத் தவிர்க்கிறார்கள். “ஏதாவது இருந்துட்டா என்ன பண்றது?” என்ற பயம். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் (Early Detection), புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது மட்டுமல்ல; செலவும் மிகக்குறைவு. முற்றிய நிலையில் கண்டறியப்படும் புற்றுநோய்களை விட, ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது எளிது மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகம்.

ADVERTISEMENT

கட்டாயம் செய்ய வேண்டிய 4 பரிசோதனைகள்:

  1. பெண்களுக்கு – மேமோகிராம் (Mammogram): மார்பகப் புற்றுநோய் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். வலி இல்லாத, சிறிய கட்டியாக இருக்கும்போதே இதைக் கண்டுபிடித்துவிட்டால், முழுமையாகக் குணப்படுத்திவிடலாம்.
  2. பாப் ஸ்மியர் (Pap Smear): கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய உதவும் மிக எளிய சோதனை இது. 21 முதல் 65 வயது வரையிலான பெண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.
  3. ஆண்களுக்கு – பிஎஸ்ஏ (PSA Test): 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். ஒரு எளிய ரத்தப் பரிசோதனை (PSA Test) மூலம் இதன் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியலாம்.
  4. பொதுவானவை:
    • குடல் பரிசோதனை (Colonoscopy): 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருவரும் குடல் புற்றுநோயைத் தடுக்க இதைச் செய்துகொள்வது நல்லது.
    • புகைபிடிப்பவர்கள்: நீண்ட காலமாகக் கடும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், நுரையீரல் ஸ்கேன் (Low-dose CT) செய்துகொள்வது பாதுகாப்பானது.

அறிகுறிக்காகக் காத்திருக்காதீர்கள்: “வலி வந்தால்தான் நோய்” என்று நினைக்காதீர்கள். பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. எனவே, உங்கள் வயது மற்றும் குடும்ப வரலாற்றைப் பொறுத்து, மருத்துவரிடம் பேசி இன்றே ஒரு ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்யத் திட்டமிடுங்கள்.

ADVERTISEMENT

பயத்தை விடுங்கள்… பரிசோதனை செய்யுங்கள். ஏனெனில், உங்கள் ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் சொத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share