வீடு அல்லது கார் கடன் வாங்க நினைக்கும் மக்களும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகாக காத்திருக்கின்றனர். இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நாணயக் கொள்கைக் கூட்டத்தின் (MPC) முடிவுகளை அறிவிப்பார். இது 2026ஆம் ஆண்டின் முதல் பணவியல் கொள்கை மதிப்பாய்வு ஆகும். எனவே இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ரிசர்வ் வங்கி புதிய ஆண்டை வட்டி விகிதக் குறைப்புடன் (REPO Interest Rate) தொடங்குமா, அல்லது பொதுமக்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டுமா என்பதுதான்.
வட்டி விகிதக் குறைப்பு நிறுத்தப்படுமா?
கடந்த 2025ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் வாங்குபவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கியது. 2025 பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ச்சியான வட்டி விகிதக் குறைப்புகள், ரெப்போ விகிதத்தை ஆண்டு முழுவதும் மொத்தம் 125 அடிப்படை புள்ளிகள் (1.25%) குறைத்தன. கடைசியாக டிசம்பர் 2025 கொள்கையில் 0.25% வட்டி குறைப்பு செய்யப்பட்டது. இந்த தீவிரமான விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் இந்த முறை ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்காது என்று கூறுகின்றனர்.
சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கூட்டத்தில் ரெப்போ விகித மாற்றத்திற்கான வாய்ப்பு மிகக் குறைவுதான். கடந்த ஆண்டு வட்டி விகிதக் குறைப்புகளின் தாக்கத்தை ரிசர்வ் வங்கி மதிப்பிட விரும்புகிறது. எனவே, வட்டி விகிதங்கள் நிலையானதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
நாட்டின் வளர்ச்சி வேகம்:
தற்போதைய பொருளாதார நிலைமைகள் கொள்கை ஸ்திரத்தன்மைக்கு சாதகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சி விகிதம் திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வங்கி அமைப்பில் போதுமான உபரி பணப்புழக்கம் உள்ளது. மேலும் அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, ரெப்போ விகிதத்தை 5.25% இல் மாற்றாமல் வைத்திருக்க MPC முடிவு செய்யலாம் என்று கணித்துள்ளனர். இதனால், EMI-களில் உடனடி குறைப்பை பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது.
பணப்புழக்கத்தில் கவனம் செலுத்துவது ஏன்?
இந்த முறை வட்டி விகிதங்களில் மட்டுமல்ல, பணப்புழக்கத்திலும் ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்தும் என்று கூறுகின்றனர். பணப்புழக்கம் குறித்த RBI இன் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள சந்தை ஆர்வமாக உள்ளது. அரசாங்க கடன் அதிகமாக இருப்பதால், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIகள்) தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் இதுவும் முக்கியமானது. வட்டி குறைக்கப்படுமா அல்லது அப்படியே வைக்கப்படுமா என்று இன்று தெரிந்துவிடும்.
