மத்திய கிழக்கில், ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தற்போது இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒரு சில உணவகங்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. சில உணவகங்கள் சிலிண்டர்களுக்கு பதில் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
சென்னை உணவகங்களில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர்கள் இருப்பதாக ஹோட்டல்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தேனாம்பேட்டையில் உள்ள ஆனந்தா ஹோட்டல், சிலிண்டர் தட்டுப்பாட்டால் வெரைட்டீல் கொடுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) முதல்வரைச் சந்தித்த பின் சென்னை ஹோட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், “இந்த சிலிண்டர் தட்டுபாட்டுக்கு காரணம் டிரம்ப்புதான். இந்த தட்டுப்பாடு தொடர்பாக வணிகர் சங்கம், ஹோட்டல்கள் சங்கம் சார்பில் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். அதுபோன்று உணவகங்களை எஸ்மா சட்டத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். எந்தெந்த நிறிவனங்களில் எவ்வளவும் இருப்பு உள்ளது என்பதை அரசுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளனர். அதன்பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்கள் மூடப்படாத நிலையை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம்.
முன்னதாக கேஸ் புக் செய்தால் அன்றைய தினமே வந்துவிடும்.இப்போது புக் செய்தால் 2,3 நாட்கள் ஆகும் என்கிறார்கள். 48 மணி நேரத்துக்கு பிறகே நிலைமை என்னவென்று தெரியவரும். ஹோட்டல்கள் என்பது சமூதாய சமையல் கூடங்கள்தான். ஒட்டுமொத்த மக்களுக்காக சமைத்து விநியோகிக்கும் இந்த சேவையில் இடையூறு ஏற்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த நிலையை மத்திய அரசுகள் தவிர்த்திட வேண்டும்” என்றார்.
