கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து மினி சரக்கு வாகனத்தை வழிமறித்து கரும்பு உள்ளதா என ஒற்றை காட்டு யானை ஒன்று துதிக்கையால் தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யபட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மலை கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழக்கமாக நடமாடி வருகின்றன. மேலும் வனப்பகுதி வழியாகச் செல்லும் சரக்கு லாரிகளில் காய்கறிகள் மற்றும் கரும்புகள் உள்ளனவா என நுகர்ந்தபடி வாகனங்களை வழி மறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து மினி சரக்கு வாகனம் ஒன்று சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூர் வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நடமாடிய ஒரு காட்டு யானை சரக்கு வாகனத்தை வழிமறித்து வாகனத்தின் மீது இரண்டு கால்களை வைத்து ஏறி கரும்புகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் உள்ளனவா? என தும்பிக்கையால் தேடியது.
அப்போது வாகனத்தை ஓட்டுநர் மெதுவாக நகர்த்தினார். இருப்பினும் வாகனம் நகர்ந்தபோதும் விடாமல் தொங்கியதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த காட்சியை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
காட்டு யானைகள் தொடர்ச்சியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.