மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி மாயமான நிலையில், கணவரை கொன்ற மனைவி இன்று (ஜூன் 9) சரணடைந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். wife surrender after killing her husband at honeymoon tour – up police
திருமணமான புதுமண தம்பதி தேனிலவு சென்ற நிலையில் மாயமான சம்பவம் வடமாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் கணவரின் உடல் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கணவரை கொன்று வீசியது மனைவி தான் என போலீசார் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (வயது 29). இவருக்கும் சோனம் (24) என்பவருக்கும் கடந்த மே 11ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
அதனையடுத்து இருவரும் ஜோடியாக தேனிலவிற்காக கடந்த மே 20ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றனர். எனினும் மூன்றாவது நாளே தம்பதியர் இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டூரிஸ்ட் கைடு போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு கடந்த ஜூன் இரண்டாம் தேதி ராஜாவின் சடலம் படுகாயங்களுடன் கூர்க் பள்ளத்தாக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோக்ராராமில் இருந்து மீட்கப்பட்டது.
எனினும் மனைவி சோனத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே சோனம் உயிருடன் இருப்பது போல தேட வேண்டும் என்றும் அவரது உடலை கண்டுபிடிக்க முயற்சிப்பது போல காட்டக்கூடாது என்றும் ராஜாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழலில் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் இன்று அதிகாலை சரணடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரை கைது செய்யப்பட்டு தற்போது அவர் உத்தரப்பிரதேச போலீஸ் கஸ்டடியில் உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய மேகாலயா டிஜிபி இதாஷிஷா, “சோனம் அவரது கணவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதற்காக கூலிப்படை சேர்ந்தவர்களை தேர்வு செய்து இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஒப்பந்த அடிப்படையிலான மூன்று கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் ராஜாவை மனைவி சோனமே கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
சோனத்திற்கும் அவரது தந்தை நடத்திவரும் ப்ளைவுட் கடையில் வேலை செய்து வந்த ராஜ குஷ்வாலா என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.
சோனத்தை விட ராஜகுஷ்வலா ஐந்து வயது சிறிய இளைஞர். கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்த நிலையில், சோனத்திற்கும் ராஜா ரகுவன்சிக்கும் திருமணம் நடந்துள்ளது.
தனது கணவரை பிடிக்காமல் தனது கள்ளக்காதல் உடன் சேர்ந்து இந்த கொலையை நடத்த திட்டமிட்டு தேனிலவுக்கு அழைத்துச் செல்வது போல் அழைத்துச் சென்று தீர்த்து கட்டி உள்ளார்.
அங்குதான் சோனம் ஏற்பாடு செய்திருந்த கூலி ஆட்கள் ராஜா ரகுவன்சியை கொலை செய்து சிரபுஞ்சி பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர்” என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் சோனம் மீதான போலீசாரின் குற்றச்சாட்டை உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினர் மறுத்து வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.