2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என சென்னையில் இன்று பிப்ரவரி 3-ந் தேதி தாம் அறிவிக்க இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்ததால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
”உள்ளம் தேடி இல்லம் நாடி” என தமிழகம் முழுவதும் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் நிறைவு பொதுக் கூட்டம் கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
அப்போது பேசிய பிரேமலதா, 2026 தேர்தலில் தேமுதிக மகத்தான வெற்றி பெறும். சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிப்ரவரி 3-ந் தேதி சென்னையில் அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
இதனையடுத்து இன்று தேமுதிக, எந்த கூட்டணியில் இடம் பெறும் என்ற அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பல மாதங்களாக பிரேமலதா கூறி வந்தார். ஆனால் கடலூர் மாநாட்டில் கூட்டணி முடிவை அவர் வெளியிடவில்லை.
அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிகவை இடம் பெற வைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரம் காட்டினார். தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷிடம் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசினார்.
இன்னொரு பக்கம், திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரமேலதாவின் அறிவிப்பு எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
