விஜய் கரூர் செல்வதற்கு காவல்துறை தரப்பில் இரண்டு தேதிகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் விஜய் நேரில் செல்லாமல் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) தவெக வழக்கறிஞர் அறிவழகன், சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு சென்று விஜய் கரூர் செல்வதற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
அப்போது காவல்துறை தரப்பில், கரூர் செல்லும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வீடு வீடாக செல்லக்கூடாது, பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் ஒரு மண்டபத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறலாம். அதுவும் ஒரு குடும்பத்திலிருந்து 5 பேருக்கு மேல் வரக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் ரசிகர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் வரும் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியை விஜய் கரூர் செல்ல நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வரும் அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும், நிலையில் கரூர் துயரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்தசூழலில் கரூர் செல்ல காவல்துறை சார்பிலே தேதி பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
“சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு கரூருக்கு நேரடியாக சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை ஓரிடத்திற்கு வரவழைத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது வருத்தத்தை தெரிவித்து இழப்பீட்டுக்கான காசோலையை வழங்குவார் விஜய்” என்று சொல்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.