தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC குரூப் 1, குரூப் 1A ‘முதல்நிலைத் தேர்வு’ முடிவுகள் அடுத்த 2 மாதங்களில் வெளியாகும் என அதன் தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். When Will TNPSC Group 1 & 1A Prelims Results Be Announced?
சென்னையில் செய்தியாளர்களிடம் எஸ்.கே. பிரபாகர் இன்று (ஜூன் 15) கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்1 தேர்வுகள் இன்று நடத்தப்படுகின்றன. குரூப் 1 தேர்வுகள் என்பது அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மிக முக்கியமான தேர்வு. இதில்தான் துணை ஆட்சியர், டிஎஸ்பி போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள், முன்கூட்டியே திட்டமிட்டு பட்டியல் வெளியிட்டு அதன் படி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தேர்வு குறித்து கடந்த நவம்பரிலேயே அட்டவணை வெளியிட்டோம். இந்த அட்டவணையின்படி 7 தேர்வுகளில் இதுவரை 5 தேர்வுகளுக்கு அறிவிக்கை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி வருகிறோம். இன்று குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ந் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகள் 3 கட்டங்களாக, முதல் நிலைத் தேர்வு- முதன்மைத் தேர்வு- நேர்காணல் என நடைபெறும். இன்று முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு மொத்தம் 2.49 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் 200 பேர் முதல் 300 பேர் வரை தேர்வு எழுதுகின்றனர்.
இன்று எழுதப்படுகிற குரூப் 1, குரூப் 1 ஏ முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும். அதில் இருந்து அடுத்த 3 மாதங்களுக்குள் முதன்மைத் தேர்வு நடைபெறும். மொத்தம் 72 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 10,071 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இன்று வரை 10,227 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த ஆண்டில் மேலும் 12,236 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இன்றைய தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட OMR விடைத்தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய தேர்வுகளில் சில சிக்கல்கள் இருந்தன. இம்முறை அதனை மாற்றி இருக்கிறோம். மாணவர்களுக்கான அறிவுரைகளையும் இம்முறை எளிமைப்படுத்தி அச்சிட்டுள்ளோம். ஆகையால் இது தேர்வர்களுக்கு பயன் உள்ள முயற்சியாக இருக்கும். இவ்வாறு எஸ்.கே. பிரபாகர் தெரிவித்தார்.