நந்தன் கௌசிக் What not to do to save the forest
மே 15 அன்று, ஹைதராபாத்தின் காஞ்சா கச்சிபௌலியில் ஏப்ரல் மாதத்தில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிராகப் பொதுமக்களின் பெரும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, 400 ஏக்கர் நிலப்பரப்பை வன நிலமாக அறிவிக்க ஆலோசனை வழங்கும் அறிக்கையைச் சமர்ப்பித்தது.
சென்னையின் மையப்பகுதியில் புல்வாய்கள் வாழும் நகர்ப்புறக் காடு எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்ற வரலாறு, ஹைதராபாத்தின் காஞ்சா கச்சிபௌலி காட்டின் எதிர்காலம் குறித்து அக்கறை உள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னையில் உள்ள கிண்டி வனப்பகுதி நகரத்தின் பசுமைப் பரப்பைப் பெரிதும் மேம்படுத்துகிறது. வெப்பத்தைத் தணிப்பதிலும், காற்று மாசுபாட்டைக் குறைப்பதிலும், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான இடங்களை வழங்குவதிலும் நகர்ப்புறக் காடுகள் வழங்கும் நன்மைகள் வெளிப்படையானவை. What not to do to save the forest
ஆனால், பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த அதன் பாரம்பரியப் பயன்பாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட காட்டை நகரத்தின் நடுவில் உருவாக்குவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் இது பாடங்களை வழங்குகிறது.
683 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி காடு இந்தியாவின் மிகச்சிறிய தேசியப் பூங்காக்களில் ஒன்று. இது “வெப்பமண்டல வறண்ட பசுமை மாறாத காடு” வகையின் அழிந்துவரும் உதாரணமாகும். What not to do to save the forest
கிண்டி காடு முதன்முதலில் 1910இல், சென்னை ஆளுநரின் இல்லத்தின் ஒரு பகுதியாக, பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. 1958இல், ராஜ்பவன் 1262 ஏக்கர் வனப்பரப்பில் 595 ஏக்கரை மாநில வனத்துறைக்குக் கைமாற்றியது. What not to do to save the forest

1957இல் இங்கு ஒரு தேசிய பூங்காவை அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டதாக ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டபோதிலும், அந்த இடம் அப்போதைய அரசு ஆவணங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் கிண்டி பூங்கா பாதுகாக்கப்பட்ட காடு என்றே அழைக்கப்பட்டது.
வனத்துறை, காட்டைப் பட்டு வளர்ப்புப் பகுதியாகவும் மான் பூங்காவாகவும் பிரிக்க முன்மொழிந்தது. இடமாற்றத்தின்போது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தற்காலிகக் குழு இந்த யோசனையை நிராகரித்துவிட்டது. அதற்குப் பதிலாக, ஒரு மூலையில் குழந்தைகள் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. What not to do to save the forest
அந்த இடத்தில் அதிக மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் எச்சரித்தனர். ராஜ்பவன் வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், “கிண்டி ஒரு சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் பல ஆண்டுகளாகத் தாவரங்களும் விலங்குகளும் அங்கு ஓரளவு பாதுகாப்பைப் பெற்றிருந்தன” என்று தற்காலிகக் குழுவில் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம். கிருஷ்ணன் எழுதினார்.
திறந்த, வேலியிடப்படாத பகுதியாக இருந்த இந்த இடத்தில் சென்னைவாசிகள் சகஜமாக வந்து போய்க்கொண்டிருந்தனர். காடு நகரக் காட்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
அதே நேரத்தில், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் – மெட்ராஸ் என்று பின்னாளில் பெயரிடப்பட்ட (சென்னை ஐஐடி) ஒரு கல்வி நிறுவனத்தை அங்கே அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ராஜ்பவன் எஸ்டேட்டின் ஒரு பகுதியாக இருந்த 1,262 ஏக்கர் வன நிலத்தில் 170 முதல் 420 ஏக்கர்வரை பயன்படுத்த நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், அந்த நிறுவனத்திற்கு 383 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
1960கள், 70களில், கிண்டி காட்டைச் சுற்றியும் உள்ளேயும் தொடர்ச்சியான நினைவுச் சின்னங்களும் நிறுவனங்களும் நிறுவப்பட்டதால், கிண்டி காட்டைப் பாதுகாப்பதன் அவசியம் மேலும் அதிகரித்தது. 1974 இல் ஐஐடி பிரதான வாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட புதிய புற்றுநோய் மருத்துவமனை வளாகம் முடிவான திருப்பமாக இருந்தது.

கிண்டியைப் பாதுகாக்கப்பட்ட வனத்திலிருந்து தேசியப் பூங்காவாக மாற்றுவதற்கு இரண்டு நிகழ்வுகள் தூண்டுதலாக அமைந்தன. முதலாவது, 1969இல் இயற்கைப் பாதுகாப்புக்கும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டிற்காகவும் செயல்படும் உலக அமைப்பான சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர்களின் வருகை. அவர்கள் கிண்டியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மத்திய அளவிலான நிர்வாகிகளுடன் பேசினர். What not to do to save the forest
கிண்டி காடு, “அழகியல், கல்வி, அறிவியல் ஆகியவை சார்ந்த நன்மைகளுக்கான ஒரு அசாதாரண வாய்ப்பை வழங்குகிறது. புத்திசாலித்தனமான நிர்வாகம் இந்திய மக்களுக்கும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கவும், நீடித்த நன்மைகளை வழங்கவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சமூகமும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த பூங்காவை இப்போதும் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாகப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது” என்று அவர்கள் கூறினர். வனத்துறை இதை கவனத்தில் கொண்டது. What not to do to save the forest
இரண்டாவது நிகழ்வு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பம். 1972ஆம் ஆண்டின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில் வனவிலங்குப் பாதுகாப்பின் பல்வேறு நிலைகளை வரையறுப்பதற்கான கட்டமைப்பை வழங்கியது. 1975-77ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த அவசரநிலை, சட்டம் இயற்றாமலேயே இது குறித்து முடிவெடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. What not to do to save the forest
1976இல், அந்தப் பகுதியில் காமராஜர் நினைவு இல்லத்தைத் திறந்துவைத்த பிறகு, இந்திரா காந்தி உலக வனவிலங்கு நிதி மற்றும் மதராஸ் பாம்புப் பூங்கா அறக்கட்டளையின் உறுப்பினர்களைச் சந்தித்தார். புற்றுநோய் மருத்துவமனையின் புதிய வளாகத்தைச் சுட்டிக்காட்டி, கிண்டிக்கு அதிகப் பாதுகாப்பு தேவை என்று அவர்கள் வலியுறுத்தினர்.
புற்றுநோய் மருத்துவமனையும் தமிழக அரசும் முன்னதாக இந்த வசதி தரிசு நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறியிருந்தன. ஆனால், இந்தப் பிரதிநிதிகள் இந்திரா காந்தியிடம் இதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள். மத்திய அரசு அப்போது பகுதியளவு கட்டப்பட்டிருந்த அந்த நிறுவனத்தை அப்புறப்படுத்தியது.

1977இல் கிண்டி காட்டுக்கு தேசியப் பூங்கா அந்தஸ்து வழங்கப்பட்டது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும், கூடுதல் பாதுகாப்பையும் இது அதிகரித்தது. அருகிலுள்ள ராஜ்பவனிலிருந்து மேலும் 83 ஏக்கர் தேசியப் பூங்காவுடன் சேர்க்கப்பட்டதால், தாவரங்கள், விலங்கினங்களைப் பாதுகாக்க வனத்துறை எல்லைகளில் வேலி அமைத்தது.
இது கிண்டியை ஒரு சுற்றுச்சூழல் தீவாக மாற்றியுள்ளது. மீட்கப்பட்ட விலங்குகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும், காயமடைந்த மான்கள் பராமரிக்கப்பட்டாலும், இந்த நிலை மாற்றம் நுழைவுக்கான கட்டுப்பாடுகளையும் பயன்பாட்டின் ஒழுங்குமுறையையும் ஏற்படுத்தியுள்ளது.
காட்டின் அருகே வசித்த மக்கள் கால்நடை மேய்ச்சல், மலம் கழித்தல் அல்லது வனப் பொருட்களைச் சேகரித்தல் போன்ற தினசரி நடவடிக்கைகளுக்கு அதைப் பயன்படுத்திவந்தார்கள். வேலிகளும் காவலாளிகளும் இதைத் தடுத்தார்கள். நடைபாதைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், உள்ளே நுழையக் காப்பாளர் அனுமதி பெற வேண்டும். வனத்திற்குள் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
காலப்போக்கில், கிண்டி காடு சென்னையில் பொதுமக்களின் கவனத்திலிருந்து விலகிவிட்டது. பல நூற்றாண்டுகளாக அது வாழ்வாதாரத்திற்கும் ஊட்டச்சத்துக்கும் ஆதாரமாக இருந்ததைப் போலத் தற்போது இல்லை. மாணவர்கள் அவ்வப்போது சென்று வரக்கூடிய ஓய்வு நேர இடமாக இல்லை.
மனிதர்கள் உருவாக்கிய கட்டுமானங்கள் நகரங்களை ஆக்கிரமிக்கும் இன்றைய உலகில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம். இயற்கைச் சூழல்கள், தாவரங்கள், விலங்கினங்களின் பாதுகாப்பு அத்தியாவசியம். ஆனால், கிண்டியில் பயன்படுத்தப்பட்ட முறை மேலிருந்து கீழ் நோக்கியது.
கிண்டியின் பாதுகாப்பு குறித்த கதை, ஹைதராபாத்தின் காஞ்சா-கச்சிபௌலி காட்டுக்கு ஒரு பாடத்தை வழங்குகிறது. இந்த நிலத்தை உயர்மட்ட அல்லது அதிகாரத்துவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நந்தன் கௌசிக் வரலாறு, நகரங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருபவர்; தனது சொந்த ஊரான சென்னை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்