இயக்குனர் பிரம்மா இயக்க, கிறிஸ்டி சிலுவப்பன் தயாரித்த குற்றம் கடிதல் என்ற சிறப்பான படத்தை வாங்கி வெளியிட்டு , தயாரிப்பாளர் ஆனதன் மூலம் புகழ் பெற்றார் ஜெ எஸ் கே சதீஷ்குமார். படம் விருதுகளும் பெற்றது.
அதன் பிறகு சதீஷ்குமார் தயாரித்த சில படங்கள் சரியாகப் போகாத நிலையில் , விஜய் ஆன்டனியுடன் அக்கினி சிறகுகள் என்ற படத்தில் நடித்தார். படம் வெளிவரவே இல்லை.
அடுத்து ஃபயர் என்ற கிளாமர் படத்தை தயாரித்து இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார் சதீஷ் குமார்.
கவர்ச்சி , சுமாரான கதை இவற்றின் காரணமாக அந்தப் படம் அவருக்கு லாபம் தந்தது .
ஆனால் அதற்கு மிக முக்கியமான காரணம் … அதுவரை சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரக்ஷிதா , திருமணம் ஆகி விவாகரத்து பெற்று சீரியல் வாய்ப்புகளும் போய் , வெறுப்பில் இருந்த பொது, இனியும் போர்த்திக் கொண்டு நடித்தால் சரி வராது என்று படு கவர்ச்சியாக நடித்தார் .
உண்மையிலேயே நடித்தது அவர்தானா இல்லை டூப்பா? என்று ஆச்சர்யப்பட்ட பலரும் படத்தைப் பார்க்க , அதனால் வந்த லாபம் அது.
வெற்றி தந்த தெம்பில் தொடர்ந்து படங்களை எடுக்க ஆரம்பித்தார் ஜெ எஸ் கே சதீஷ்குமார்.
குற்றம் கடிதல் படம்தானே சதீஷ்குமாருக்கு புகழ் வெளிச்சம் தந்தது . எனவே அதே பெயரில் அடுத்த படத்தை எடுத்திருக்கிறார் சதிஷ் குமார்.
குற்றம் கடிதல் 2, பயர் மாதிரியான படமா? இல்லை குற்றம் கடிதல் 1 மாதிரியான படமா என்பதுதான் இப்போது கவனிக்கப்படும் விஷயம்.
ஆனால் இது பரபரப்பான திரில்லர்-டிராமா திரைப்படமாக உருவாகி வருகிறது.என்கிறார்கள். பாண்டியராஜன், அப்பு குட்டி,, தீபக், பாவல், பத்மன், பி.எல். தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்பே பல படங்களில் அறிமுகமாகவிருந்து, நடக்காமல் போய் , ஜே எஸ் கே சதீஷ்குமாரின் ஃ பயர் படத்தில் வில்லனாக அறிமுகமான பாலாஜி முருகதாஸ் இந்தப் படத்திலும் இருப்பதன் மூலம் ஜெ எஸ் கே யின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆகி இருக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கொடைக்கானல், தேனி, சிறுமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
”படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து பின்னணி குரல் பதிவுகள் நடக்கின்றன . படப்பிடிப்பின் போது பதிவான நடிப்பின் தீவிரமும் இயல்பும் குன்றாமல் இருக்க, அப்படத்தின் இயக்குநர் எஸ்.கே. ஜீவா டப்பிங் பணிகளை அவரே நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார்” என்று பெருமையோடு கூறுகிறது படக்குழு. (ஏங்க இதில் என்ன பெருமை? ஒவ்வொரு படத்துக்கும் இயக்குனர் கண்டிப்பாக டப்பிங்கில் இருப்பார் , ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் , ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல படங்கள் இயக்கும் இயக்குனர் கூட டப்பிங் பணிகளை மேற்பார்வையிடவாவது செய்வார்.
அது ஒன்றும் பெருமைக்கு உரிய விஷயம் அல்ல. அடிப்படைப் பணி
எனவே நாமும் இந்த குற்றத்தை கடிவோம்
— ராஜ திருமகன்
