”திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது” என மாவட்டச் செயலாளர்களை தாம் எச்சரித்துள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வகையிலே ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்து, அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களை எல்லாம் இங்கு அழைத்து, ஒரு சிறிய அளவிலே ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் போல இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கக்கூடிய உங்களை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கூட்டணிக் கட்சியினுடைய தலைவர் என்ற அந்த முறையிலே உங்கள் அத்தனை பேரையும் நான் வருக வருக வருக என்று வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
நடைபெற இருக்கக்கூடிய இந்தத் தேர்தலை ஒட்டி நாம் அமைத்திருக்கக்கூடிய இந்தக் கூட்டணி புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. தொடர்ந்து 2 நாடாளுமன்றம், ஏற்கனவே நடந்து முடிந்திருக்கக்கூடிய 2021-ல் நடைபெற்ற சட்டமன்றம், இடையிலே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத் தொடர்ந்து ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலே கூட இல்லாத வகையிலே இவ்வளவு ஆண்டுகாலம் தொடர்ந்து இருக்கக்கூடிய ஒரு கூட்டணியாக நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணி தொடர்ந்து அமைந்திருக்கிறது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று, மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
ஆக அப்படிப்பட்ட இந்தக் கூட்டணியை, மதச்சார்பற்ற இந்தக் கூட்டணியை 2026-ஆம் ஆண்டு, இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களும் இது தொடருகிறது. அப்படித் தொடரக்கூடிய இந்தத் தேர்தலில் நாம் எப்படி களம் காண இருக்கிறோம், குறிப்பாக ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு இடங்களை, எண்ணிக்கையிலே எவ்வளவு இடங்களை வழங்குவது என்று கலந்து பேசி, அதைத் தொடர்ந்து எந்தெந்த தொகுதி என்பது குறித்தும் கலந்து பேசி, அந்த முடிவு எட்டியதற்கு பின்னால் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் விட இந்தக் கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம். ஏற்கனவே இருந்த கூட்டணியை விட இப்பொழுது இன்னும் சில கட்சிகள் சேர்ந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம். ஆக அப்படி அமைத்திருக்கக்கூடிய இந்தக் கூட்டணி கட்சியினுடைய தலைவர்கள் எங்களுடைய அழைப்பை ஏற்று வந்தமைக்கு நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், “கூட்டணிக்கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது என மாவட்டச் செயலாளர்களை எச்சரித்துள்ளேன். எங்கேனும் சுணக்கம் இருந்தால் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை இருக்கும்” எனவும் உறுதி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான வைகோ, தொல். திருமாவளவன், பெ.சண்முகம், கமல்ஹாசன், மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
