அசோக் செல்வன், மணிகண்டன், நாசர், இளவரசு, அபி ஹாசன், அஞ்சு குரியன், ரித்விகா, ரேயா, ரிஷிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் என்று பல நட்சத்திரங்களை ஒரு கதைக்குள் அடக்கியிருந்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. 2022இல் அப்படம் வெளியானது. அப்போதே, ‘யார் இவர்’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் இயக்குனர் விஷால் வெங்கட். இவரது அடுத்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார். vishal venkat set arjun das as hero in his bomb
ஆனாலும், ரொம்ப நிதானமாகவே தனது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார் என்றும், அதுவும் முந்தைய படம் போன்றே சில மனிதர்களின் வாழ்வனுபவமாகத் திரையில் தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்போது அதன் டைட்டில் ‘பாம்’ என்று தெரிவித்திருக்கிறார் விஷால் வெங்கட். இதில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு தற்போது வீடியோவாக வெளியாகியிருக்கிறது.
’இன்னும் எத்தனை காலம் எங்கிட்ட மறைப்ப உன் காதலை’ என்று இமானின் பாடல் பின்னணியில் ஒலிக்க, ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அர்ஜுன் தாஸும் சிவாத்மிகாவும் காதல் வளர்ப்பதாக நீள்கிறது இந்த வீடியோ. அவர்களின் பின்னால் ஒரு ஆள் அடி வாங்கிச் சுவரோரம் சரிந்து கிடக்கிறார்.
அந்த ஷாட், அந்த இருவரது காதல் எப்படியொரு அசாதாரணமான சூழலில் வெளிப்படுகிறது என்பதைச் சொல்லிவிடுகிறது. ‘பாம்’ குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்துகிறது.
காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிற ‘பாம்’ விரைவில் நிறைய ‘அப்டேட்’களை தரவிருக்கிறது. ’டூரிஸ்ட் பேமிலி’ பெறுகிற வரவேற்பைக் கண்டபிறகு, அது போன்ற நிறைய படங்கள் வர வேண்டுமென்ற வேட்கை திரையுலகினரைக் காட்டிலும் ரசிகர்களிடத்தில் அதிகமாகியிருக்கிறது. ‘பாம்’ படமும் அதிலொன்றாக இருக்கட்டும் என்று எண்ண வைத்திருக்கிறது இந்த அறிவிப்பு..!