விஜய் முகத்தை நேரில் பார்ப்பதற்கே பல பேர் சாகவும் அஞ்சுவதில்லை.
விஜய் ஷூட்டிங்கிற்கு வந்தாலே பெரும் கூட்டம் கூடும். அவர் படப்பிடிப்பை பார்ப்பது என்பதே பலருக்கும் பெரிய அனுபவம்.
அவர் படத்தில் நடிப்பது என்பது இன்னும் லக். அவரை வைத்து படம் இயக்குவது என்பது பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பால் வாழ்க்கை மாறியது பலருக்கு .
ஆனால் , ஜேசன் சஞ்சய்…!
விஜய்யின் மகனாகப் பிறந்தும், விஜய்யை வைத்துப் படம் இயக்காமல் (காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்) சந்தீப் கிஷனை வைத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் ‘சிக்மா’.
ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உடன் நடித்துள்ளனர்.
படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது என்றாலும் இதற்கும் விஜய் காரணமாக இருக்க மாட்டார் என்றே நம்புவோம்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இந்தப் படத்தின் டீசர் டிசம்பர் 23, 2025 அன்று படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படம் வெளிவருவதற்கு பதினேழு நாட்களுக்கு முன்பு.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. படமாக்குவது குறித்து ஜேசன் சஞ்சயின் தெளிவும், திட்டமிட்டபடி முழு படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்துள்ளதும் இயக்குநராக அவரது திறமையை காட்டுகிறது. படப்பிடிப்பை முதலில் 80 நாட்கள் திட்டமிட்டோம். ஆனால், எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உட்பட முழு படப்பிடிப்பையும் படக்குழுவினர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே முடித்தனர்.
ஒரு படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே, எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இது பாசிட்டிவான விஷயம்தான். படத்தின் raw visual footage-ஐ நானும் சுபாஸ்கரன் அண்ணாவும் பார்த்தோம். இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் தொழில்நுட்பக் குழு தங்கள் முழு உழைப்பையும் கொடுத்து மாயாஜாலம் செய்துள்ளனர்” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறுகையில், “லைகா புரொடக்ஷன்ஸ் போன்ற ஒரு மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாகவதை உண்மையிலேயே பாக்கியமாகக் கருதுகிறேன். கதைக்கு என்ன தேவையோ அதை தயாரிப்பாளர்களாக எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செய்து கொடுத்து படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய கிரியேட்டிவ் புராசெஸில் முழு நம்பிக்கை வைத்து எந்த குறுக்கீடும் அவர்கள் செய்யாததால் படப்பிடிப்பை திட்டமிட்ட 80 நாட்கள் ஷெட்யூலுக்கு முன்பாகவே முடித்தோம். ’சிக்மா’ பட நடிகர்கள் மற்றும் குழுவினரின் அற்புதமான முயற்சிக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. பார்வையாளர்களுக்கு ரிச்சான விஷூவல் அனுபவம் இந்தப் படத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். ” என்றார்.
சுயம்புலிங்கம் !
