விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்குவது குறித்து சட்டப்படிதான் செயல்படுவோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்தப் படம் வெளியான பின்னர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என விஜய் அறிவித்திருந்தார். இதனால் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகன் திரைப்படம், ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கான சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் அதீத விலைக்கு ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.
ஆனால் ஜனநாயகன் திரைப்படத்துக்கு இன்னமும் தணிக்கை குழு (சென்சார் போர்டு) சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரடொக்ஷன்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜனவரி 6-ந் தேதி விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, “ஜனநாயகன் படத்துக்கான ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டப்படிதான் செயல்படுவோம். அப்படித்தான் செயல்பட முடியும்” என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த பதில், ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நாளை (ஜனவரி 7)-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
