விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜனவரி 27-ந் தேதி தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ’ஜனநாயகன்’. இத் திரைப்படம் பொங்கல் ரிலீசாக ஜனவரி 9-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் ஜனவரி 9-ந் தேதி படம் வெளியாகவில்லை.
’ஜனநாயகன்’ படத்துக்கு என்ன நடந்தது?
டிசம்பர் 24, 2025: சென்சார் போர்டு அறிவுறுத்திய திருத்தங்களுடன் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் (CBFC) மீண்டும் படம் கொடுக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் உடனடியாக வழங்கப்படவில்லை. ஜனநாயகன் திரைப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனவரி 6, 2026: தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி, “ஜனநாயகன்” படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஜனவரி 7, 2026: வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
ஜனவரி 8, 2026: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஜனவரி 9, 2026: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவா அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கல் ரிலீசாக ஜனவரி 9-ல் வெளியாகவில்லை.
ஜனவரி 15, 2026: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு எதிராக படக் குழு, உச்சநீதிமன்றத்தை நாடியது.
உச்ச நீதிமன்றமோ இந்த வழக்கை விசாரிக்க மறுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஜனவரி 20, 2026: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை படத் தயாரிப்பு குழு தாக்கல் செய்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
ஜனவரி 27, 2026: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
