சென்னையில் நாளை மறுநாள் தாஜ் ஹோட்டலில் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் விஜய்

Published On:

| By Mathi

TVK Vijay

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களையும் நாளை மறுநாள் மார்ச் 29-ந் தேதி சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் அறிமுகம் செய்து வைக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இ‌ந்‌‌த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வகையில் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share