வரும் 21ஆம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென் தமிழகத்தை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெக இரண்டாம் மாநாடு நடைபெறுகிறது.
சுமார் 506 ஏக்கருக்கு மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாநாடு நடைபெறும் திடல் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நேற்று முன் தினம் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து தவெக இரண்டாவது மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தவெகவினர் கூறுகின்றனர்.
இந்தநிலையில் தவெக தலைவர் விஜய், மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து இன்று (ஆகஸ்ட் 12) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்… இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்…
வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்…
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு…
அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி…
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.