திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும், என்.டி.ஏ-வின் பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 11) நடைபெறுகிறது. இதற்காக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி திருச்சி வந்தடைந்தார்
இதற்கிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகைத் தந்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இடம்பெறுவார் என்று சொல்கிறார்களே, அவர் வருவாரா?
எந்த ஒரு கூட்டணியும் பலப்படுவது சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் சொல்ல முடியும். மேலும் கட்சிகள் வந்து பலப்படுவது ஒரு சிறப்பான விஷயம். திமுகவில் ரோட்டில் போறவங்க, தபால் போட வந்தவங்க, ஸ்விகியில் உணவு கொடுக்க வந்தவங்க எல்லாரையும் கட்சியில் சேர்த்து அவர்களுக்கு சீட் கொடுக்கிறார்கள். அம்மா, எம்.ஜி.ஆர் காலத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள், காலாவதி ஆனவர்கள் எல்லாம் அங்கு இணைகிறார்கள். அப்படி இருக்கும் போது டி.ஏ கூட்டணி பலப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.
கொள்கை ரீதியாக பாஜக-வை விஜய் எதிர்த்தாரே, அப்படியிருக்க அவர் வருவாரா?
தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதற்காகத்தான். மற்றபடி ஒரே கொள்கை இருக்கிறவர்கள் எல்லாம் ஒரே கட்சியாகத்தான் இருந்துவிட்டு போய்விடலாமே. எதிர் கொள்கை இருப்பவர்கள் கூட கூட்டணியில் சேருவார்கள். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
அப்படி விஜய் வந்தால் பவர் ஷேரிங் எப்படி இருக்கும்?
கூட்டணி இன்னும் பலம்பெற வேண்டும் என்ற விருப்பத்தில் நான் இதைச் சொல்கிறேன். மற்ற விஷயங்களை அண்ணன் ஈ.பி.எஸும், பாஜக-வின் டெல்லி தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள்.
எடப்பாடி பழனிசாமி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்கிறாரே?
எங்கள் விருப்பமும் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது.
