தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (மார்ச் 20) இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார். தீவிரமான தேர்தல் பணிகளுக்கு மத்தியில் அவரது இந்தத் திடீர் பயணம் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார். இரவு 7:10 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தின் 6-வது நுழைவாயிலுக்கு தனது காரில் வந்த விஜய் தனி விமானம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்றார். பாதுகாப்பு சோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் பயணம் செய்த தனி விமானம் இரவு 7:24 மணி அளவில் மும்பை நோக்கிப் புறப்பட்டது.
விஜய்யின் இந்த மும்பை பயணத்திற்கு காரணங்கள் கூறப்படுகின்றன. திரையுலகில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் (Costume Designer) ஏகா லக்கானி மற்றும் தயாரிப்பாளர் ரவி பாக்சந்த்கா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் விஜய்யின் பல்வேறு விளம்பரப் படங்களுக்கு ஏகா லக்கானி ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்பதற்காகவே விஜய் மும்பை சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று (Censor) தொடர்பான பணிகளுக்காக அவர் மும்பை செல்வதாகவும் கூறப்படுகிறது.
விஜய் உடன் வழக்கமாக தனி விமானத்தில் செல்லும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் தவெக கட்சியினர் உள்ளிட்ட யாரும் அந்த தனி விமானத்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
