பஹல்காம் தாக்குதல் பேச்சு… நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

Published On:

| By christopher

vijay devarakonda fir under sc st act

பழங்குடியின மக்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. vijay devarakonda fir under sc st act

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஏப்ரல் 26ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்ட கலந்துகொண்டார்.

அப்போது அவர் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேசுகையில், “காஷ்மீர் மக்கள் நம்மைப் போன்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘குஷி’ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அவர்களுடன் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றன.

ஆனால் தனது சொந்த நாட்டு மக்களை கூட பாகிஸ்தானால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல், 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

அவரது பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக கூறி பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு விஜய் எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.

அதில், “நமது நாட்டின் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை, அவர்களை மிகவும் மதிக்கிறேன். நமது ஒற்றுமையை பற்றித்தான் பேசினேன். இந்தியா எப்படி ஒன்றாக இருக்கிறதோ நம் மக்களும் அப்படியே இருக்கிறோம். நாமும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதைத்தான் பேசினேன். நான் எப்படி இந்தியா மக்களை பாகுபாடு காண்பித்து இழிவுபடுத்தி பேசுவேன்? அவர்களும் என் குடும்பம் போலத்தான். நான் பயன்படுத்திய பழங்குடி என்ற வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித சமூகத்தின் மோதலை குறிக்கிறது. ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.

எனினும் பழங்குடி மக்களின் உணர்வுகள் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எப் ஐ. ஆர் கடந்த 17ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை விஜய் தேவரகொண்டா தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share