தவெக தலைவர் விஜய் விவகாரத்தில் நடிகை திரிஷாவை விமர்சித்ததற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பார்த்திபன் கூறியுள்ளதாவது; சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறி விடுகின்றன. கலாட்டா விருது விழாவில் ரேபிட் ஃபயர் (Rapid Fire) போல கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்குச் சற்றும் யோசிக்காமல் டான் டான் என பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், த்ரிஷா அவர்களின் போட்டோ திரையில் வந்ததும் என்ன சொல்வது என யோசிக்கையில், ‘குந்தவை குந்தவை’ என குரல் எழுப்பினர். உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே ‘குந்தவையை வீட்டிலேயே குந்தவைக்கவும்’ (அமர வைக்கவும் என்ற பொருளில்) ‘பிரச்சனை வராமல் இருக்க’ என கூற, அரங்கமே கைதட்டியது, பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.
இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் ‘குந்தவையைத் தவிர்த்திருக்கலாம்’ என்றார். உடனே கலாட்டா அருணா அவர்களிடம் அதை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காக நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்குச் செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண் பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு, சுதந்திரத்தைக் கைபிடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான். எனவே பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்கசக்தி. இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பார்த்திபனின் இந்தக் கருத்துக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
