சுமார் 18 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புதிய ரயில் சேவை நாளை (மார்ச் 14) தொடங்குகிறது.
கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 5 கி.மீ நீளமுள்ள திட்டம், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சுமார் 18 ஆண்டுகள் தாமதமானது.
இந்தசூழலில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 5-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 10ஆம் தேதி இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் தொடங்கப்படவில்லை.
இந்தநிலையில் நாளை இந்த வழி தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை கடற்கரை – பரங்கிமலை 43 பேர்ஸ், அதாவது மொத்தம் 86 முறை ரயில்கள் இந்தத் தடத்தில் முன்னும் பின்னுமாக இயக்கப்படும். சென்னை கடற்கரை – வேளச்சேரி 2 பேர்ஸ், பரங்கிமலை – வேளச்சேரி 3 பேர்ஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையம் இப்போது ஒரு ‘மெகா’ போக்குவரத்து மையமாக மாறுகிறது. இங்கே பறக்கும் ரயில் புறநகர் ரயில், மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய மூன்று சேவைகளும் ஒரே இடத்தில் இணைவதால் பயணிகள் எளிதாக மாறிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
