அனுராஜ் மனோகர் இயக்கத்தில், அபின் ஜோசப் எழுதி, டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் கடந்த 23ஆம் தேதி வெளியானது ‘நரிவேட்டை’ திரைப்படம். vedan vaada veda rap in narivetta gets respect
இப்படத்திற்கு ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.
காட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் அரசுக்கு எதிராக போராடும் பழங்குடியினரின் போராட்டத்தையும், அவர்களை கட்டுப்படுத்த துடிக்கும் காவல்துறையினரின் அடக்குமுறையையும் பேசுகிறது நரிவேட்டை.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோயின் இசையமைத்துள்ளார். அவருடன் இணைந்து ’வாடா வேடா’ என்ற பாடலை பிரபல ராப் பாடகர் வேடன் எழுதி பாடியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தலித் சமூகத்தைச் சேர்ந்த வேடனுக்கு எதிராக சங் பரிவார் அமைப்புகள் புகார் தெரிவித்து வரும் நிலையில், வேடனின் வா வேடா பாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அதில், ”காட்டு மரம் முறிந்துவிட்டது.
காடு முழுவதும் காக்கி பேய்கள் நிறைந்துள்ளன.
இயந்திர துப்பாக்கிகள் பாடும்போது
தாய்க்கிளி அழுகிறது”
என்ற பாடலின் முதல் நான்கு வரிகளே நரிவேட்டை படத்தின் முழு கதையையும் பிரதிபலிக்கின்றன.

பழங்குடியினரின் போராட்டத்தை கட்டுப்படுத்தவும், அரசாங்கத்திற்காக காட்டை அழிக்கவும் உதவவும் வந்த போலீசாரை ‘காக்கி பேய்கள்’ என குறிப்பிடுகிறார்.
இயந்திரங்களால் காடுகள் அழிக்கப்படுவதைக் கண்டு, தங்கள் கூடுகள் சின்னாபின்னமாக சிதறுவதைக் கண்டு தாய்க்கிளி அழுகிறது என்கிறார்.
தொடர்ந்து பாடலில், இயற்கை எதிர்கொள்ளும் அநீதியையும், மலைகளும் மரங்களும் எவ்வாறு இடிந்து விழுகின்றன என்பதையும் பட்டியலிடுகிறார்.
மேலும் மேலும் காட்டில் உள்ள மரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு இருக்கும் இதயம் மனிதர்களுக்கு ஏன் இல்லை? என்று கேள்வி எழுப்புகிறார்.
அதே போன்று கான்ஸ்டபிளான படத்தின் நாயகன், தான் சரி என்று நம்புவதற்கும் தனது கடமை என்ன என்பதற்கும் இடையில் சிக்கிக் கொள்வதை ‘எல்லாமே கருப்பு அல்ல’ என குறிப்பிடுகிறார்.
வேடனின் இந்த பாடல், அதிகாரத்தை எதிர்த்து போராடும் பழங்குடியினரின் வலியை, மட்டுமின்றி, காடுகளில் இருக்கும் உயிரினங்களின் கூக்குரலையும் சேர்ந்தே பாடுகிறது.
படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோசன் பாடலாக யூடியூபில் வெளியான ’வாடா வேடா’ இதுவரை 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
