தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்பது கமல்ஹாசனின் வெறும் அரசியல் கூற்று அல்ல, அவர் தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரனாரின் கருத்தைத்தான் கூறியுள்ளார் என விசிக எம்.பி ரவிக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். vck mp ravikumar support kamalhaasan
’தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்’ என நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தக் லைஃப் ரீல் தடை செய்வதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) கடந்த மே 30ஆம் தேதி அறிவித்தது.
அதற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி நாக பிரசன்னா முன்பு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு தெரிவித்த நிலையில், ’வரும் ஜூன் 5ஆம் தேதி தக்லைஃப் திரைப்படம் கர்நாடாகாவில் வெளியாகாது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் கமல் மன்னிப்பு கேட்காததை தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வரவேற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள விசிக எம்.பி. ரவிக்குமார், தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்ததற்கான ஆதாரங்களையும் பகிர்ந்துள்ளார்.
அது மொழி நுலாரின் முடிபு!
அதில், “கமல்ஹாசன் சொன்னது அரசியல் கூற்று அல்ல. “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!” என்பது தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல். தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்குத் தந்த தமிழறிஞர் சுந்தரனாரின் கருத்தைத்தான் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதுவொரு அரசியல் கூற்று அல்ல, மொழி நுலாரின் முடிபு!
“ கர்நாடகம் என்பது வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பர் வடமொழிப் புலவர். ஆயினும் டாக்டர் குண்டெர்ட் கூறுவதுபோல் கரு+நாடு + அகம் என்ற தமிழ்ச் சொற்களின் அடியாகப் பிறந்தது அச்சொல் என்று கொள்வதே சிறப்பாகும்” என கால்டுவெல் ஒப்பிலக்கணம் கூறுகிறது.

அனைத்துவிதமான வெறுப்பு அரசியலுக்கும் ஊற்றுக் கண்ணாகத் திகழும் பிற்போக்குவாதிகள் தாம் இந்தப் பிரச்சனையிலும் பின்புலமாக உள்ளனர். அவர்களது சூழ்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் பலியாகிவிடக்கூடாது. இதில் விழிப்போடிருந்து திராவிட ஒற்றுமையைக் காக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை பணிவோடு வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
’அந்த’ வரி நீக்கப்பட்டது ஏன்?
மேலும், நமது மின்னம்பலம்.காம் தளத்தில் அவர் எழுதி இன்று வெளியான ‘தமிழும் அதன் உதிரத்து உதித்தெழுந்த திராவிட மொழிகளும்!’ கட்டுரையை பகிர்ந்தும் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “கன்னட மொழிக்கும் தமிழ் மொழிக்குமான உறவைப்பற்றி கமல்ஹாசன் கூறிய கருத்தை முன்வைத்து கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை இதன் அண்மைக்காலச் சான்றாகும். சமஸ்கிருத மேலாதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டிய தேவை உள்ளது.
அந்த ஒற்றுமையை அரசியல் தளத்தில் கட்டியெழுப்புவதற்குத் திராவிட மொழிகளுக்கிடையிலான உறவை மொழியியல் அடிப்படையில் வலுவாக எடுத்துச் சொல்வது இன்றியமையாததாகும்.

மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்டபோது அதிலிருந்த “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே” என்ற வரி நீக்கப்பட்டது.
அதற்கான காரணத்தை கலைஞரே ஒரு கூட்டத்தில் விளக்கியிருக்கிறார்: “கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் (தமிழிலிருந்து உருவானவை ) என்பதெல்லாம் மொழி ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கலாம்.
கன்னடக்காரர்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? தெலுங்குக்காரர்கள் ஒத்துக்கொள்வார்களா? நாம் இங்கே தமிழை வாழ்த்தப் போய் தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே கசப்பும் பூசலும் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வரி விடப்பட்டது( முரசொலி 11.9.2005 ) என அவர் கூறியிருக்கிறார்.
ஒரு மொழியியல் உண்மையை வலியுறுத்துவது அரசியல் முரண்பாட்டுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே கலைஞரின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. அது ஏற்கத் தக்கதுதான் என்றாலும் மொழியியல் உண்மையை மேலும் ஆதாரபூர்வமாக ஆய்வுத் தளத்தில் நிறுவும் கடமையை அரசியலுக்காக நாம் புறக்கணிக்கக்கூடாது” என ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.