சுற்றி வளைத்த மக்கள்: தப்பி ஓடிய எம்.எல்.ஏ.

Published On:

| By Aara

கோயில் கும்பாபிஷேகம் செய்ய நன்கொடை கேட்டவர்களிடம் தொகுதி எம்.எல்.ஏ. சொன்ன பதிலால் கோபமான மக்கள் முற்றுகையிட, ஊரை விட்டே எம்.எல்.ஏ. எஸ்கேப் ஆகிவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் (தனி) தொகுதியில் கடந்த 25 வருடமாக தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது.  கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் வன்னி அரசு போட்டியிட்டார், அவரை எதிர்த்து  அதிமுக வேட்பாளராக சக்கரபாணி வெற்றி பெற்றார். 

அதிமுக எம். எல். ஏ. சக்கரபாணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.   கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.00 மணியளவில், எம்.எல். ஏ. சக்கரபாணி, தனது பேரப்பிள்ளைகளின் காதணி விழா அழைப்பிதழை, சிறுவையூர் கிராமத்தில் உள்ள தனது  கட்சிகாரர்களுக்கு கொடுப்பதற்காகச் சென்றார். ஊர் முருகன் கோயில் வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கி தனது கட்சி நிர்வாகியை கை பேசியில் தொடர்புகொண்டு அழைத்தார்.

அவர் வந்ததும்  கிளை செயலாளர் சிவக்குமார் வீட்டுக்கு செல்ல நகர்ந்தபோது, ஊர் நாட்டாமை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் எம். எல். ஏ. வைப் பார்த்து வணக்கம் வைத்தனர்.  கூடவே,  ’இரண்டாவது முறையாக எம். எல். ஏ.வாக இருக்கீங்க. நாங்களும் உங்களுக்கு தொடர்ந்து ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கோம்.  இதுவரையில எங்க ஊருக்கு ஒண்ணும் செய்யல, இதோ எங்க ஊர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருது. அதுக்கு ஏதாச்சும் நன்கொடை கொடுங்களேன்” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கோபமான எம். எல். ஏ. சக்கரபாணி,  “உங்க ஊர் கோயிலுக்கு என்கிட்ட  ஏன் நன்கொடை கேட்கறீங்க?  பிச்சை எடுக்காத குறையா இப்படியெல்லாம் கேட்கலாமா?”  என்று கேட்டதும்  ஊரே கொந்தளித்துவிட்டது. ஊர் மக்கள் ஒன்று கூடி எம்.எல். ஏ. வை சுற்றி வளைத்து கடுமையான வார்த்தைகளை வீசினார்கள்.  சில இளைஞர்கள் எம்.எல்.ஏ.வைத் தாக்க முயன்றபோது காரில் ஏறி சாமர்த்தியமாக  எஸ்கேப் ஆகிவிட்டார் எம்.எல்.ஏ.  

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share