நாடாளுமன்றத்தில் கமலஹாசனின் பேச்சு எனக்கு ஒன்றும் புரியவில்லை, யாருக்காவது புரிஞ்சதா என சொல்லுங்க.. என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து, ஜூலை 2025-ல் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பேசுகையில், தமிழ் பிச்சை எடுக்க உதவாது… திருடவும் உதவாது.
தமிழின் பிச்சை எடுக்க மாட்டான்… அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.
தங்கச்சி… ஓட்டையும் நாட்டையும் கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன்.
கருணையுடன் நீங்களே ஏற்பீர்கள். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்றிது.
‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. ‘வந்தீர் வென்றீர் செல்வீர்’ இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட” என்று உரையாற்றினார்.
கமல் ஹாசன் நாடாளுமன்றத்தில் பேசிய உரை சமூகதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசனிடம், நடிகர் கமல்ஹாசனின் நாடாளுமன்ற பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாவது குறித்த கேள்விக்கு, “சமூக வலைதளங்களில் என்ன வைரலாகிறது. யாருக்காவது ஏதாவது புரிந்ததா?
கமலஹாசனின் பேச்சு எனக்கு ஒன்றும் புரியவில்லை, யாருக்காவது புரிஞ்சதா என சொல்லுங்க.. கமல் பேச்சு புரியாமல்தான் கோவை மக்கள் அவரை அனுப்புனாங்க.. ஆனால் அவர் எதற்காக நிறுத்தப்பட்டாரோ அந்த முதலாளிகள் இப்போது டெல்லி அனுப்பி இருக்கின்றனர். இப்போது அவர்களுக்காவது டெல்லியில் கமல் நியாயம் பண்ணகூடாதா?” என தெரிவித்தார்.
