“கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ராஜ் மோகன் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். அச்சமயத்தில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அக்கட்சியினர் அங்கிருந்து வெளியேறி விட்டனர். தவெகவினரின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் உள்ளிட்ட பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் துணை பொதுச் செயலாளர் ராஜ் மோகன் தனது எக்ஸ் பதிவில், “வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.
நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.