ரஷ்யாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா கடற்கரையில் இன்று (ஜூலை 20) ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tsunami warning for Russia due to 7.4 earthquake
ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இருந்து சுமார் 140 கிமீ தொலைவில் இன்று 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 32வது நிமிடத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 10 கிமீ ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. இதனை ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையமும் உறுதிபடுத்தியது.

கமாண்டர் தீவுகளில் உள்ள மக்கள் தொகை குறைவாக உள்ள அலூட்ஸ்கி மாவட்டத்தை 60 செ.மீ வரை அலைகள் அடையக்கூடும் என்றும், கிழக்கு கம்சட்காவில் உள்ள உஸ்ட்-கம்சட்ஸ்கி பகுதியை 40 செ.மீ வரை அலைகள் பாதிக்கலாம் என்றும், அதே நேரத்தில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி பகுதியில் 15 செ.மீ வரை அலைகளைக் காணக்கூடும் எச்சரித்துள்ளனர்.
கம்சட்கா மண்டலத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி பகுதியில் 180,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இந்த பகுதியானது ஜப்பானின் வடகிழக்கிலும், அமெரிக்க மாநிலமான அலாஸ்காவின் மேற்கிலும் அமைந்துள்ளது. இது கம்சட்கா தீபகற்பம் பசிபிக் மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது.
முன்னதாக 1952 நவம்பர் 4ஆம் தேதி கம்சட்காவில் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.