அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் வாக்குறுதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளதாவது:
டிரம்ப் சொல்லியிருப்பது உண்மையென்றால் இந்தியாவின் இறையாண்மையையே மோடி அரசு விட்டுக்கொடுத்துவிட்டது என்றுதான் பொருள். இதற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்.
“அமெரிக்கா விதித்த வரியில் 7% குறைக்கும், ஆனால் இந்தியாவோ அமெரிக்காவிலிருந்து தான் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியே விதிக்கக்கூடாது. வரியை 0% ஆகக் குறைக்க வேண்டும். அமெரிக்காவுடனான வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும்” என அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் சொல்லியிருப்பது பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாக சரணடைந்திருப்பதையே காட்டுகிறது.
ஈரானை ஒப்பந்தத்துக்கு வர வைப்பதற்கு படைகளைக் குவித்த டிரம்ப் இந்தியப் பிரதமரைப் பணிய வைப்பதற்கு என்ன செய்தார்? அதானி மீதான வழக்குதான் இந்தியாவின் சரணடைவுக்குக் காரணமா?
டிரம்ப்புடன் பேசியது என்ன என்பதை நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
