அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பின், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி இந்தியா மீது 50 சதவீதம் வரை வரி விதித்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 50 சதவிகிதம் இறக்குமதி வரி அமலுக்கு வந்துள்ளது.
இதனால் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின் பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடும் வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஜின் பிங் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும் அதில் மிகவும் ஆழமான இருள் கொண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்து விட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.