“என் ராசிக்கு இன்னைக்கு எப்படி இருக்கும்?” என்று காலண்டரைப் பார்த்த காலம் போய், இப்போது இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் (TikTok) “எனக்கான கார்டு என்ன சொல்லுது?” என்று தேடும் காலம் வந்துவிட்டது. ஆம், 2025-ன் மிகப்பெரிய லைஃப்ஸ்டைல் டிரெண்டுகளில் ஒன்று ‘டேரோ கார்டு ரீடிங்‘ (Tarot Card Reading). ஒரு காலத்தில் குறி சொல்வது போலப் பார்க்கப்பட்ட இந்த விஷயம், இப்போது மனநலம் மற்றும் சுயப்பரிசோதனைக்கான (Self-care tool) நவீன கருவியாக மாறியுள்ளது.
ஏன் இந்தத் திடீர் மவுசு? குறிப்பாக ‘Gen Z‘ மற்றும் ‘Millennials’ மத்தியில் டேரோ ரீடிங் சக்கை போடு போடுகிறது. இதற்குக் காரணம், இது எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோசியமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, நம் ஆழ்மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு விடை தேடும் ஒரு உளவியல் சார்ந்த விஷயமாகவே இது பார்க்கப்படுகிறது.
மனநலத்திற்கான ‘கண்ணாடி‘: இன்றைய இளைஞர்கள் வேலை, காதல், எதிர்காலம் எனப் பலவிதமான மன அழுத்தங்களில் உள்ளனர். அவர்களுக்குத் தேவை, “நாளைக்கு உனக்கு நல்லது நடக்கும்” என்ற வெற்று வாக்குறுதி அல்ல; “உன் பிரச்சனைக்குக் காரணம் உன் பயமா? அல்லது சூழ்நிலையா?” என்று சிந்திக்க வைக்கும் வழிகாட்டுதல்தான். டேரோ கார்டுகள் அதைத்தான் செய்கின்றன. இது உங்கள் மனதை நீங்களே பார்த்துக்கொள்ள உதவும் ஒரு கண்ணாடி (Mirror to your soul) போன்றது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
டிஜிட்டல் டேரோ& AI ரீடர்ஸ்: இப்போது டேரோ ரீடரைத் தேடி நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ‘Tarot Apps‘ வந்துவிட்டன. உங்கள் கேள்வியை டைப் செய்தால் போதும், நொடியில் அதற்கான கார்டையும், விளக்கத்தையும் துல்லியமாகத் தருகின்றன இந்த ஆப்கள். ‘Ceerly’, ‘TarotQA’ போன்ற செயலிகள் இளைஞர்களின் மொபைலில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
‘ஷேடோ வொர்க்‘ (Shadow Work): டேரோவில் இப்போது அதிகம் டிரெண்டாகும் ஒரு முறை ‘ஷேடோ வொர்க்’. அதாவது, நமக்கே தெரியாமல் நமக்குள் மறைந்திருக்கும் எதிர்மறை குணங்கள் அல்லது பயங்களை (Shadow self) வெளிக்கொண்டு வந்து, அதைச் சரிசெய்வது. “ஏன் எனக்கு ரிலேஷன்ஷிப் செட் ஆகல?”, “ஏன் எனக்குக் கோபம் வருது?” போன்ற கேள்விகளுக்குத் தீர்வு காண இது உதவுகிறது.
இதை முழுமையாக நம்புவதும், நம்பாததும் தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஒரு பதற்றமான சூழ்நிலையில், மனதிற்குச் சிறிது ஆறுதலும், தெளிவும் கிடைக்கிறது என்றால், அந்த டிரெண்டை வரவேற்பதில் தப்பில்லைதானே!
