வால்பாறை அருகே ஆதிவாசி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அந்த பெண் சாலை வசதி இல்லாததால் 5 கிலோமீட்டர் தொட்டில் கட்டிலில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேக்கல்முடி பகுதி பாலகினார் ஆதிவாசி பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இந்த மக்களுக்கு தற்போது வரை சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் தங்கம்மாள் என்ற பெண் வீட்டை விட்டு வெளியே வந்த போது காட்டு எருமை அவரை தாக்கி தூக்கி வீசியது. இதில் தங்கம்மாள் பலத்த காயமடைந்தார். இரவு நேரம் என்பதாலும் சாலை வசதி இல்லாததாலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத சூழ்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் வைத்து காத்திருந்தனர்.
இன்று பகல் நேரத்தில் பாலக்கினாறு செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து சேக்கல்முடி பகுதிக்கு 5 கிலோ மீட்டர் தொலைவு வரை காட்டெருமை தாக்கி காயமடைந்த பெண்ணை தொட்டில் கட்டி கொண்டு வந்தனர். பின்னர் சேக்கல் முடி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது பாதிக்கப்பட்டட பெண் வால்பாறை அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.