தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 15-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2021-23ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ1,183 கோடி மதிப்பில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இம்முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர்- நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி விசாரணை அக்டோபர் 15-ந் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.