2026ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்தசூழலில் 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 10) அனுப்பிய கடிதத்தில், “தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கும், ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்குமேல் பதவியில் உள்ளவர்களை சொந்த மாவட்டங்களில் நியமிக்கக்கூடாது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் முதல் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
