குரூப் 4 பணிக்கான விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து டிஎன்பிஎஸ்சி இன்று (ஜூலை 22) விளக்கம் அளித்துள்ளது. tnpsc Group 4 answer sheet box damage arise doubts
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்றன. அதன்படி வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன.
மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடைக் குறிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.
பொதுவாக தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, முறையாக பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும்.
ஆனால் சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் அட்டைப்பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள், மதுரையில் உரிய பாதுகாப்பின்றி வழக்கத்திற்கு மாறாக தனியார் ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதும், பேருந்தின் கதவு வெறும் ஏ4 சீட் மூலம் சீலிடப்பட்டதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ”தேர்வுகள் முடிந்தததும், விடைத்தாள்கள் டிரங்க் பெட்டியில் வைக்கப்பட்டு சீலிடப்படும். சாதாரண அட்டைப்பெட்டியில் அவை கொண்டுவரப்படாது. விடைத்தாள்கள் தவிர்த்து தேர்வு தொடர்பான மற்ற ஆவணங்கள் மட்டுமே அட்டைப்பெட்டியில் வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”அட்டைப்பெட்டிகள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்திருக்கிறது என்பது குறித்து உரிய விசாரணை நடைபெறும்” என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.