தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் கரூர், ஈரோடு, நாகை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை (SP) இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் எஸ்.பி.யாக D.N. ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்.பி.யாக D.V.கிரண் ஸ்ருதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நாகை எஸ்.பி.யாக சுர்ஜித் குமார், விருதுநகர் எஸ்.பி.யாக Dr.N.ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த 4 எஸ்.பி.க்களையும் தேர்தல் தொடர்பான வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. இந்த இடமாற்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், நாளை முதல் 4 பேரும் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமிழகத் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
