தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 15) அறிவித்தது.
இந்நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் உத்திகள் மற்றும் நடைமுறைகள் குறித்து இன்று (மார்ச் 16, 2026) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க.
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் – நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!” என தெரிவித்துள்ளார்.
