அதிமுக- பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு (தமாகா) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் ஜிகே வாசன் இன்று ஆலோசனை நடத்தினார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே வாசன் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு
- ஒட்டன்சத்திரம்
- கிள்ளியூர்
- ராணிப்பேட்டை
- ஈரோடு மேற்கு
- கும்பகோணம்
ஆகிய 5 தொகுதிகளில் தமாகா, தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
2021 சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் எந்த இடத்திலும் தமாகா வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதிகளை மீண்டும் கேட்டது. ஆனால் அதிமுக தரப்பில் 3 அல்லது 4 தொகுதிகள்தான் தர முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஜிகே வாசன் அதிருப்தியடைந்தார். இதனை வெளிப்படுத்தும் வகையில் சென்னை அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஜிகே வாசன் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
