”பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடிச்சு இன்னைக்கு காலையில ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக 5000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் அரசு பணிகளில் சேருவோருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி இன்று பிப்ரவரி 13-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்று குட் மார்னிங் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு இது ஒரு சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கு.
பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடிச்சு இன்னைக்கு காலையில ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக 5000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
இன்று எனக்கு மகிழ்ச்சியோடு பொறுப்புணர்வும் கூடுதலாகி இருக்கு. பதவியேற்றபோது சொன்னேன், வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்று சொன்னேன்.
அனைவருக்குமான முதலமைச்சராகத்தான் இந்த ஐந்து ஆண்டுகள் இருந்தேன். இனியும் அனைவரையும் அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதலமைச்சராக தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் ஒன் ஸ்டேட்டாக உயர்த்தக்கூடிய எண்ணத்தோடு அந்த பொறுப்புணர்வு எனக்கு கூடியிருக்கு.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாத்த நீங்கதான் பக்கபலமாக இருக்கப் போறீங்க. நம்மோட நிர்வாகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கணும். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேத்த அதை தொடர்ந்து நிறைவேற்ற அரசினுடைய வருவாய்களை பெருக்கணும். பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்கணும். அடுத்த தலைமுறையை கைதூக்கி விடணும். அதற்கான மன உறுதியை நெஞ்சில் ஏந்தியபடி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.
நீங்களும் வாழ்க்கையில பல தடைகளை கடந்து தேர்விலே வெற்றி பெற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க. நீங்களும் அப்படித்தான் ஃபீல் பண்ணுவீங்கன்னு நம்புறேன். கல்வியில் சிறந்து போட்டித் தேர்வுகளில் வென்று மதிப்புமிக்க அரசு ஊழியர்களா போற்றுதலுக்குரிய ஆசிரியர்களா பொறுப்பேற்கக்கூடிய உங்க எல்லாரையும் அரசு பணிகளுக்கு வருக வருக என வரவேற்பதுல நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்க வளர்ச்சியை பார்த்து உங்க பெற்றோர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையறாங்களோ அதே அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
