தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.கவினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி் கடந்த 2023 ம் ஆண்டு நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று 50 லட்ச ரூபாய் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜ் நாகமணி தம்பதியின் இளைய மகன் அருணாச்சலம் ஒரு வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோவில் தனது சகோதரன் திருமூர்த்தி உயிரிழந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த பா.ஜ.கவை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் வழக்கு நடத்த உதவி செய்தனர். இதையடுத்து வழக்கில் இழப்பீடு வந்தவுடன், அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்சம் ரூபாய் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர்.
இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் தேர்தல் வருகின்றது. இதனால் தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி, பா.ஜ.கவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன் ஆகியோர் மிரட்டுகின்றனர். 10 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை எனில் குடும்பத்தில் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என இளைஞர் அருணாச்சலம் குற்றம் சாட்டி உள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.