கொலை விழும் அபாயம்… மிரட்டப்பட்ட அமைச்சர் – என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

Published On:

| By Minnambalam Desk

Meyyanathan What is Stalin going to do

’ஆயிரம் இருந்தாலும் மாயவரம் மாதிரி வருமா?’ என்பது மாயவரம் என்னும் மயிலாடுதுறையை பெருமைப்படுத்தும் சொற்றொடர். Meyyanathan What is Stalin going to do

ஆனால் திமுகவிலோ, மயிலாடுதுறை மாவட்டம்  ஒரு மாதிரியாக போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் குமுறலாகவும் புலம்பலாகவும் ஒலிக்கிறது.

மயிலாடுதுறை திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் மீது தான் மாவட்டத்தின்  பெரும்பாலான நிர்வாகிகள் அறிவாலயத்துக்கு சென்று புகார் அளித்து வந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் துணை முதல்வர் உதயநிதியிடமும் சென்று நிவேதா முருகன் மீது நீண்ட புகார் பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

என்னதான் நடக்கிறது மயிலாடுதுறை திமுகவில்?  லோக்கல் நிர்வாகிகள் முதல் அறிவாலயம் வரை விசாரித்தோம்.

“சில வாரங்களுக்கு முன் எங்கள் மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு மயிலாடுதுறை மாவட்ட  ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போதே  சீனியரான மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளராக நிவேதா முருகனை வைத்துக் கொண்டு கட்சி நடத்த முடியாது என்று நேருவிடம் ஆவேசமாக கூறினார்கள்,

மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட  சில நிர்வாகிகள் மாவட்டச் செயலாளருக்கு ஆதரவாக இருந்தார்கள். இவர்களுக்கு இடையே வாக்குவாதமாகி இருதரப்பினருக்கும் ஒரு கட்டத்தில் கை கலப்பு ஏற்பட்டது. அமைச்சர் நேரு தான் சமாதானப்படுத்தினார்.  

‘நான் எத்தனையோ மாவட்ட பிரச்சினைய பாத்திருக்கேன். ஆனா, இது மாதிரி பாத்ததில்லை’ என்று நேரு சொல்லிவிட்டுப் போனார். முதல்வரிடமும் இதுபற்றி தெரிவித்துள்ளார் நேரு. 

அதன் பின் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதனை புதுக்கோட்டையில் சந்தித்து நிவேதா முருகனுக்கு எதிராக அனைத்து நிர்வாகிகளும் புகார் கொடுத்தனர். பின் அறிவாலயத்தில் நேரு முன்னிலையில் இது தொடர்பாக பஞ்சாயத்தும் நடந்தது.

அதன் பின் கடந்த  ஜூன் 6 ஆம் தேதி பொறுப்பு அமைச்சர்  மெய்யநாதன்  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக புதுக்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தார். அவருக்கு சித்தர் காடு பகுதியில்  மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் தவிர்த்து மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், மாநில அணி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு கொடுத்தார்கள்.

அதன் பின் நிவேதா முருகன் மட்டும்  தனது  ஆதரவாளர்கள் சிலருடன்  தனியாக பொறுப்பு அமைச்சர் மெய்யநாதனுக்கு வரவேற்பு கொடுத்தார்.

ஒரு தனியார் மண்டபத்தில் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு,  காவேரி இல்லம் எனப்படும் விருந்தினர் மாளிகைக்கு சென்றார் மெய்யநாதன்.  அப்போது விருந்தினர் இல்ல வாசலில் குற்றப் பின்னணி கொண்ட பலர் குவிக்கப்பட்டிருந்தனர். இதை சில முக்கிய நிர்வாகிகள் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்களைப் பார்த்துக் கொண்டே மெய்யநாதன் காவேரி இல்லத்துக்குள் சென்றார். அவரது அறையில் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன், மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் ராமசேகரன் மற்றும் முத்து மகேந்திரன்,  ஐடி விங் மாநில துணைச் செயலாளர் செம்பனார்கோவில்  ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

ராமசேகரனும், ஸ்ரீதரும் மாசெவுக்கு எதிராக பொறுப்பு அமைச்சரிடம்  புகார் கூறினார்கள். அப்போது நிவேதா முருகனின் ஆதரவு நிர்வாகிகள் பொறுப்பு அமைச்சரையே எச்சரிப்பது போல பேசினார்கள். இதெல்லாம் வெளியே வளாகத்தில் கூடியிருந்த கட்சியினருக்கும் சத்தமாக கேட்டது.

 
நிலைமை ஒரு மாதிரியாக ஆவதை உணர்ந்த பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் அங்கிருந்து டென்ஷனாக கிளம்பி போய்விட்டார். பொறுப்பு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளைக் கூட அங்கே நின்றவர்கள் முறைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு மாவட்ட துணைச் செயலாளர்  ஞானவேலன், ஐடி விங் மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட  நிர்வாகிகள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் ஆதரவாளர்கள் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தால் அது சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையில் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்பதால் கட்சித் தலைமையிடமும் போலீஸிடமும் இப்படி   முன்னெச்சரிக்கையாக  தகவல் கொடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு  நிவேதா முருகனுக்கு எதிரான  முக்கிய நிர்வாகிகள் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து, ‘மயிலாடுதுறையில் நிலைமை  கை மீறி போய்விட்டது. உட்கட்சித் தகராறு கொலையில் முடிவதற்குள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு ஒன்றிய செயலாளரையும் தனியாக அழைத்து சமாதானம் பேசி வருகிறார். ஆனால், ஒன்றிய செயலாளர்களோ மாவட்ட செயற்குழு கூட்டத்தைக் கூட்டுங்க என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மயிலாடுதுறையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இப்போதைய உண்மை நிலவரம்” என்றனர் திமுக நிர்வாகிகள்.

முதல்வர் ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் பிறந்த மாவட்டம் என்பதால் மாவட்ட திமுகவின் தற்போதைய நிலைமை பற்றி துர்கா ஸ்டாலின் கவனத்துக்கும்  சிலர் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்,  உட்கட்சி மோதல்  சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுக்க ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share