எழுத்தாளர் ஒருவர் (லோகு) காரில் பயணிக்கும்போது, பைக்கில் வந்து வழி மறிக்கும் அடையாளம் தெரியாத நபரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி ( அர்ஜுன்)
மனநலம் பாதிக்கப்பட்ட (!) அம்மாவுடன் (பிரியதர்ஷினி) வாழும் இளைஞன் ஒருவன் (பிரவீன் ராஜா) மேட்ரிமோனியல் மூலம் தெரிய வந்த பெண்ணுடன் ( ஐஸ்வர்யா ராஜேஷ்) பழகிக் கொண்டிருக்கிறான்.

எழுத்தாளர் பிரசுரிக்க விரும்பாமல் தனக்கு மட்டும் எழுதிக் கொண்ட ஒரு நாவல் இருப்பது தெரிய வருகிறது. அம்மாவுடன் வாழும் இளைஞன் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளருக்கும்(சிவாஜி ராம்குமார்) எழுத்தாளருக்கும் நட்பு இருப்பதும் தெரிய வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அங்கே ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு பதிமூன்று வயது பெண் குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்திருப்பது தெரிய வருகிறது .
அது விபத்தா? கொலையா? இல்லையா ? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதிலில் மேலே சொன்ன கேரக்டர்கள் வேறு நபர்களும் ஆபத்துக்கு ஆளாக குற்றம் நடந்தது என்ன? என்பதே
அருள்குமார் தயாரிப்பில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம், பிரவீன் ராஜா, சிவாஜி ராம்குமார், தங்கதுரை, ஜி கே ரெட்டி, பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி நடிப்பில் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கி இருக்கும் தீயவர் குலை நடுங்க.
தீயவர் குலை நடுங்க என்று செ(ழு)ந்தமிழ் பெயர் வைத்து இருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள்.
எழுத்தாளர் கொலை செய்யப்படும் ஆரம்பக் காட்சியிலேயே இயக்குனர் தினேஷ் லக்ஷமணனின் படமாக்கல், சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு, பரத் ஆசீவகனின் இச , லாரன்ஸ் கிஷோரின் ஒளிப்பதிவு என்று எல்லாமும் சிறப்பு.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹீரோ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அர்ஜுன்.
மனைவியோடு ரெசார்ட்டுக்கு போய் ஒருவன் தங்க , அங்கே அவள் பாத்ரூமில் இருக்கும்போது எவனோ எடுத்த வீடியோ இணையத்தில் வர, அதனால் அந்தக் கணவன் மனைவியை விவாகரத்து தரச் சொல்லி பிடிவாதம் பிடிக்கும் பிரச்னை, தன் கவனத்துக்கு வரும்போது போலீஸ் அதிகாரி அதைத் தீர்த்து வைக்கும் காட்சி எழுத்தின் கம்பீரம். .
காவேரிக் கறை என்று அந்த நாவலின் பெயர் எழுதப்பட்டு இருக்க, வழக்கமான இப்போது தமிழ்ப் படங்களில் வரும் எழுத்துப் பிழைகள் போல இதுவும் ஒன்று என்று நினைத்தால் , கறை என்று எழுதி இருப்பதற்கு காரணம் சொல்வது சிறப்பு.
ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுமி கேரக்டரில் அற்புதமாக ஜொலிக்கிறார் பேபி அனிகா.
இப்படி பாராட்ட விஷயங்கள் இருந்தாலும் திரைப்படமாக ரசிகர்களைக் கவர தவறுகிறது படம்.
ஒரு நிலையில் நாம் பார்ப்பது படம் இல்லை; ஒரு நாவல் படிக்கிறோம் என்ற அளவில் சுருங்கி விட்டது.
இந்த பிராங்க் ஸ்டார் ராகுல்-காமெடி என்ற பெயரில் எது எதையோ உளறி பார்ப்பவர்களை வெறுப்பேற்றுகிறார். அவர் என்ன பேசினாலும் காமெடி என்று யார் எப்படி முடிவு செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு தடவை கூட காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.
படத்தின் ஒரு கேரக்டருக்கு அவ்வளவு முக்கியமான ன் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை போட்டு இருப்பதால் இடைவேளை திருப்பம் மிக சுலபமாக புரிந்து விடும் அபாயம் இருக்கிறது . ஒரு த்ரில் கதைக்கு பொருத்தமான ஆர்ட்டிஸ்டைப் போடுவது அவ்வளவு முக்கியம்.
அதுதான் அப்படி என்றால் ஆன்ட்டி கிளைமாக்சில் வரும் ஒரு திருப்பம் வேண்டாத வேலை.
தவிர இடைவேளைக்கு பிறகு முழுக்கதையும் எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாகவே இருக்கிறது. ஒரு வேளை வேறு ஏதாவது சொல்வார்கள் என்று நம்பினால் அதுவும் நடக்கவில்லை. மனசுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அப்படியே வருவதும் படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது.
கடைசியில் வரும் சண்டைக் காட்சிகள் எல்லாம் ரொம்பப் பழைய சினிமா. சீரியஸான விஷயத்தை சினிமாத்தனமாக சொல்லி முடிக்கிறார்கள்
தீயவர் குலை நடுங்க என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்; ஆனால் படம் முழுக்க நல்லவர்கள்தான் குலை நடுங்கி கொண்டு இருக்கிறார்கள் . அதோடு பார்ப்பவர்களும் !
–— ராஜ திருமகன்
