பாலசுப்ரமணியம் முத்துசாமி The path to India
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வணிகம் செய்வது தொடர்பாக வருவதற்கு முன்பு, இந்தியா உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளுள் ஒன்றாக இருந்தது. உலகின் நான்கில் ஒரு பங்கு (25%) மதிப்புள்ள பொருட்களை இந்தியா உற்பத்தி செய்து வந்தது. வேளாண்மை, ஜவுளி, ஆபரணங்கள் போன்றவை இங்கே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகின. The path to India
அப்படிப்பட்ட ஒரு பொருளாதார சக்தி, 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறிய போது, உலகின் 4% உற்பத்தியாகக் குறைந்து, சூம்பிப் போனது. வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரும் பொருளாதாரக் கொள்ளைகளுள் ஒன்று இந்தியாவின் ஆங்கிலேயக் காலனி ஆட்சி.

விடுதலை பெற்ற காலத்தில், இந்தியா உலகின் மிக ஏழை நாடுகளுள் ஒன்றாகவும், மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுள் ஒன்றாகவும் இருந்தது. 90% க்கும் அதிகமான மக்கள் கல்வியறிவற்று, ஏழைகளாக வாழ்ந்து வந்தனர். இந்தியர்களின் சராசரி ஆயுள் 33 ஆண்டுகளாக இருந்தது. இந்தியா கொள்ளை நோய்களின் கூடாரமாக இருந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் இலக்கு உணவுத் தன்னிறைவை அடைவதாக இருந்தது. இந்தியாவின் பெரு நதிகளின் குறுக்கே நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு, நீர்ப் பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டன. வீரிய வித்துக்கள், வேதி உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை கொண்டுவரப்பட்டு, அடிப்படை உணவு தானியங்களான கோதுமை மற்றும் நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. பின்னர் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, 2% மட்டுமே நிதி உதவி பெற்று வந்த வேளாண் துறைக்கான கடன் 40% வரை அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக இந்தியா உணவுத் தன்னிறைவை அடைந்து, 1969 ஆண்டு முதல் உணவு தானிய இறக்குமதி நின்று போனது. The path to India

இதே காலகட்டத்தில், ஒன்றிய அரசு உயர்கல்வி குறிப்பாக தொழிற்கல்வியில், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கியிருந்தது. உலகின் மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியில், சிறந்த தொழிற்சாலைகள் உருவாகின.
ஆனால், சுதந்திர இந்தியா செய்யாமல் விட்டுப் போன இரண்டு விஷயங்கள் இருந்தன. அவை அனைவருக்குமான அடிப்படைக் கல்வியும், சுகாதாரமும். இவையிரண்டும் அடிப்படைத் தேவைகள் என்பதை அரசு உணர்ந்திருந்தாலும், இவற்றில் போதுமான கவனம் செலுத்தவில்லை. The path to India
1990 ஆம் ஆண்டு, இந்தியா தனது லைசென்ஸ் ராஜ் முறைகளை விடுத்து, சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுத்த போது, இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 367 அமெரிக்க டாலர்களாக இருந்தது. சீனர்களின் சராசரி ஆண்டு வருமானம் 317 அமெரிக்க டாலர்களாக இருந்தது.

The path to India
1990 ஆம் ஆண்டு தொடங்கி, அடுத்த 25 ஆண்டுகள், சீனப் பொருளாதாரம் சராசரியாக 9.91% சதம் வளர்ந்தது. இதே காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 6.5% வளர்ந்திருக்கிறது. The path to India
இந்தியாவுக்கு 10-12 ஆண்டுகளுக்கு முன்பேயே பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கியிருந்த சீனா, 1980-1990 வரையிலான பத்தாண்டுகளில் 7.9% பொருளாதார வளர்ச்சியை எட்டியிருந்தது. இக்காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6% ஆக இருந்தது. The path to India
இந்த உயர்வேக வளர்ச்சிக்கு, சீன அரசு மிகத் தீவிரமாக அந்நிய முதலீடுகளை ஈர்த்து, முக்கியமான பொருளாதார மண்டலங்களில், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது முக்கியமான காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக சீனம் உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்தது.
இந்த வேக வளர்ச்சிக்கு உறுதுணையாக மிக முக்கியமான ஒரு துணைக்காரணி இருந்தது. அது சீனத்தின் மனித வளம். சீனத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது டென் ஷியாவ் பிங் என்றாலும், அந்தச் சீர்திருத்தங்கள் வருகையில், அந்தச் சீர்திருத்தங்களுக்கு உந்துசக்தியாக இருக்கத் தேவையான மனித வளம் தயாராக இருந்தது. அதன் பின்ணணியில், 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனம் முன்னெடுத்த மனித வள மேம்பாடுத்திட்டங்கள் இருந்தன. The path to India
கீழ்க்கண்ட புள்ளி விவரங்களே அதற்கான சான்றுகள். The path to India
1980 | 1990 | |||
கல்வியறிவு% | ஆண் | பெண் | ஆண் | பெண் |
இந்தியா | 56 | 30 | 64 | 39 |
சீனா | 79 | 51 | 87 | 68 |
குழந்தை இறப்பு | ||
நாடு/வருடம் | 1980 | 1990 |
சீனா | 47 | 42 |
இந்தியா | 121 | 86 |
(இறப்பு/1000 பிறப்பு) | ||
பிரசவ மரணங்கள் | ||
நாடு/வருடம் | 1980 | 1990 |
சீனா | 165 | 87 |
இந்தியா | 670 | 556 |
(இறப்பு/லட்சம் பிரசவங்கள்) |
மக்களின் சராசரி ஆயுள் | ||
நாடு/வருடம் | 1980 | 1990 |
சீனா | 64 | 68 |
இந்தியா | 53 | 59 |
(ஆண்டுகள்) |
அதே போல, தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள் உருவாக்குவதிலும் சீனம் பலபடிகள் முன்னணியில் இருந்துள்ளது. போலியோ தொற்று நோய்க்கான தடுப்பூசித் திட்டத்தை சீனம் 1965 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. நாம் 1985 ஆம் ஆண்டில்தான் தொடங்கினோம். சீனாவில் போலியோ 2000 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. இந்தியாவில் போலியோ 2013 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. The path to India

விடுதலை பெற்ற இந்தியாவில் உணவுத் தன்னிறைவு, தொழில்மயமாக்கம், பொருளாதார வளர்ச்சி, உயர் தொழில்கல்வி போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அனைவருக்குமான அடிப்படைக் கல்வி மற்றும் சுகாதாரம் என்னும் இந்த இரண்டு துறைகளுக்குக் கொடுக்கப் படாதது, இன்று பின்னோக்கிப் பார்க்கையில் பெரும் பிழை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. The path to India
பொதுநலத் திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும்
15 ஆவது நிதிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர், தனது முக்கியமான அவதானிப்புகளை முன்வைத்து, பொதுநலத் திட்டங்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில பரிந்துரைகளை முன்வைத்தார்.

அவற்றுள் மிக முக்கியமான அவதானிப்பு என்பது இந்தியாவில் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையேயான எதிர்மறைத் தொடர்பு.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், பொருளாதார வளர்ச்சி அதிகமுள்ள மாநிலங்களில், மக்கள் தொகை வளர்ச்சியும், குடியேற்றமும் நிகழ்கின்றன. ஆனால், இந்தியாவில், பொருளாதாரம் வேகமாக வளரும் மாநிலங்களில் (தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம்) மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறைவாக உள்ளது. அதே சமயத்தில், பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலங்களில், மக்கள் தொகை வளர்ச்சி வேகம் அதிகமாக உள்ளது (உத்திரப் பிரதேசம், பீஹார்).

இந்த வளர்ச்சி முரண்பாட்டினால், வளர்ந்த மாநிலங்களுக்கும், பின் தங்கிய மாநிலங்களுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்த இடைவெளியைக் குறைப்பதே பொதுநலத்திட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே வளர்ச்சி குறைவான மாநிலங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீடுகள், அம்மாநிலங்களின் மக்கள் நலத்திட்ட மேம்பாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். அடிப்படைக் கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு போன்ற துறைகளில் இந்த மாநிலங்கள் கவனம் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் திட்டமிடப்பட்டு, அதற்கான கட்டுப்பாடுகளும், ஊக்கத் தொகைகளும் கொண்ட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்னும் யோசனையைத் தெரிவித்தார்.
அண்மையில், ஃப்ரண்ட்லைன் இதழுக்காக பிடிஆர் தமிழ்நாட்டை, உத்திரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு, தரவுகள் அடிப்படையிலான ஒரு ஆழமான கட்டுரையை எழுதியிருந்தார். 2004 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம், உத்தரப்பிரதேசத்தில் இருப்பவரை விட 2.3 மடங்கு (230%) அதிகமாக இருந்தது. அது 2022-23 ஆம் ஆண்டு 3.3 மடங்கு (330%) அதிகரித்திருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், உத்தரப்பிரதேசம் தொடர்ந்து, தமிழ்நாட்டை விட அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்று வந்தாலும், ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இதன் விளைவாக, 2004-5 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டை விட 19% பெரிய பொருளாதாரமாக இருந்த உத்திரப் பிரதேசம், 2013-14 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டை விட 3% சிறிய பொருளாதாரமாக மாறிவிட்டது.
இத்தரவுகளை முன்வைத்து, அதிக நிதி ஒதுக்கீடு என்பது அதிக பொருளாதார வளர்ச்சியைத் தந்து விடாது, சரியான துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டால் மட்டுமே அது அதிகப் பொருளாதார வளர்ச்சியைத் தரும் என வாதிடுகிறார் பிடிஆர்.
பெரும் தொழிற்கட்டமைப்பு சாத்தியமில்லாத கேரளா, மக்கள் நல மேம்பாடு, மகளிர் நலம், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் விளைவாக, அம்மாநிலத்தின், மக்கள் நலக் குறியீடுகள், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பது நம் கண் முன்னே உள்ள வெற்றிகரமான உதாரணம்.
அரசின் மிக முக்கியமான நோக்கம் மனித வள மேம்பாடாக இருக்க வேண்டும். செயல்படும் அடிப்படைக் கல்வி, சுகாதாரம், மகளிர் நலத் திட்டங்களே மாநிலங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
வருங்காலம்: பொருளாதார வளர்ச்சி வேகமும், நிதி ஒதுக்கீடும்
1980 களில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக (5.6%) வளரத் தொடங்கியது. 90 களில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக, அந்த வளர்ச்சி 6%த்தைத் தொட்டது. தொடர் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக, 2004-2014 ஆண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம், 7.7% ஆக மேலும் உயர்ந்தது. ஆனால், 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி வேகம் 7%க்கும் குறைவாகவே இருந்தது. 2014-2024 வரையிலான வளர்ச்சி வேகத்தை (கொரொனா ஆண்டை விலக்கி) கணக்கிட்டாலுமே அது சராசரியாக 7%த்தைத் தாண்டாது.
கடந்த 10 ஆண்டுகளில், அரசு, சாலைக் கட்டமைப்பு, மாற்று எரிசக்தித் துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பெருமளவு முதலீடு செய்து வருகிறது. ஆனாலும், பொருளாதார வளர்ச்சி வேகம் முந்தய 10 ஆண்டுகளை விடக் குறைவாகவே இருந்து வருகிறது..
இன்று, உலகிலேயே மிக அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான விஷயம். ஆனால், வேலை வாய்ப்பின்மை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. அடுத்த கால் நூற்றாண்டில், மக்கள் தொகையில் இளைஞர்கள் சதவீதம் குறையத் தொடங்கிவிடும். சமூகத்தில் முதியவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் அதிகரிக்கத் தொடங்கி விடும்.

எனவே, அடுத்த பத்தாண்டுகளில் பொருளாதார வேக வளர்ச்சி சதவீதம் உயர்வது மிக முக்கியம். ஆனால், அந்த வேக வளர்ச்சியை அடைய அரசின் தற்போதைய அணுகுமுறை போதாது. புத்தாக்க சிந்தனைகள் தேவை. குறிப்பாக சமூகப் பொருளாதார அளவீடுகளில் பின் தங்கியிருக்கும் மத்திய, வட மாநிலங்களின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்வது மிகவும் முக்கியம். The path to India
அதற்கு அந்த மாநிலங்கள் தங்களது அடிப்படைக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் செயல்பாடுகளை சீர் செய்வது மிக முக்கியம். அதற்கான திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் முதன்மைப்படுத்தப்பட்டு, அவை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தப்பட வேண்டும்.
1990 was the last time India was ahead of China. Look at the per person income data
கட்டுரையாளார் குறிப்பு: The path to India
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.