ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை வரும் வியாழக்கிழமை (பொங்கல் அன்று) உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்திற்குள் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.மேலும், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
தற்போது, மேல்முறையீட்டு மனுவை வரும் வியாழக்கிழமை (பொங்கல் அன்று) உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினர் பலரும் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜனநாயகன் படத்தின் நாயகனும் தவெக தலைவருமான விஜய் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
