மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளை ஒட்டி, சென்னை வாலாஜா சாலையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அமைதிப் பேரணியில் கலந்துகொண்டு நடந்து வருகிறார். வாலாஜா சாலையில் தொடங்கிய இந்த பேரணி, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் (அண்ணா சதுக்கம்) வரை சென்றது. இதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சருடன் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் இன்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
அண்ணா நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்,”அண்ணா”!
“தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்”
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று…
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அதிமுக இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!
அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!
தமிழகத்தை மீட்போம்
மக்களைக் காப்போம்
அண்ணா நாமம் வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார்.
