முதல்வர் எனக்கு போட்ட உத்தரவு… உதயநிதி ஓபன்டாக்!

Published On:

| By Selvam

மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்ன உதவியை கேட்டாலும் உடனே செய்து கொடுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 11) தெரிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி கெளரவித்தார்.

பின்னர் உதயநிதி பேசும்போது, The Chief Minister order to me Udhayanidhi Open Talk

“சுய உதவிக் குழுக்களுக்கு அங்கீகாரம்!

வருடம் முழுவதும் எத்தனையோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களின் நிகழ்ச்சிக்கு வருகின்ற பொழுது சொந்த வீட்டிற்கு, என்னுடைய உறவினர்களை, என்னுடைய சொந்த அக்காக்களை, தங்கைகளை பார்க்கின்ற அந்த உணர்வு எப்போதுமே இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஏற்படும்.

அந்த பாச உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சியிலும் நான் உங்களையெல்லாம் சந்திக்க வருகை தந்திருக்கின்றேன்.

கலைஞர் 1989 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்களை
ஆரம்பித்தார். அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளாட்சி துறையின் அமைச்சராக இருந்தபோது, இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுடைய உழைப்பிற்கு அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்து, அவர்களையெல்லாம் ஒவ்வொரு படியாக உயர்த்தி காட்டினார்.

கலைஞர் சுய உதவி குழுக்களை தொடங்கினார். ஏதோ ஒரு திட்டத்தை தொடங்கிவிட்டோம். மகளிருக்கு கடன் உதவி கொடுக்கின்றோம். தொழில் செய்கிறார்கள் அவர்களே முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்று அவர் நிற்கவில்லை. அந்த குழுக்கள் எல்லாம், ஒவ்வொரு குழுவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கலைஞர் மிக உறுதியோடு இருந்தார். அதனால்தான், தமிழ்நாடு எங்கும் சிறப்பாக செயல்படுகின்ற அந்த குழுக்களுக்கு அந்த சகோதரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் இந்த மணிமேகலை விருதுகளை கலைஞர் தான் அறிவித்து கொடுக்க ஆரம்பித்தார்.

பெண் விடுதலையே மகளிர் முன்னேற்றம்!

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்த விருதுகள் எல்லாம் கொடுக்காமல் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனே இந்த விருதுகளை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

பெண் விடுதலையே மகளிர் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று முழங்கியதுதான் திராவிட இயக்கம். பெரியாருடைய பெண்ணுரிமை சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற ஆட்சியாக கலைஞர் ஆட்சி காலம் இருந்தது.

இப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

தமிழ்நாட்டில் 4,76,000 மகளிர் குழுக்கள் அதில் 53,74,000 பேர் உறுப்பினர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். தமிழ்நாட்டு மகளிருடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒரு மாபெரும் இயக்கமாக இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறீர்கள்.

மகளிருக்கு கடன் உதவி!


நான் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் போனாலும், அங்கு இருக்கக்கூடிய மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை வரவழைத்து அவங்களிடம் நீ பேச வேண்டும். அவர்களுடைய குறைகளையெல்லாம் நீ கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அப்படி எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்த குழுக்களை சந்திப்பது என்னுடைய வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்கு போயிருந்தேன். அங்கேயும் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை வரவழைத்து பேசினேன்.

அதே மாதிரி 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றிருக்கும்போது அங்கு இருக்கக்கூடிய குழு சகோதரிகளையெல்லாம் வரவழைத்து அவர்களிடம் பேசினேன்.

குழுக்கள் மூலம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த கடன் உதவி, பயிற்சி, பொருட்களுக்கான அந்த சந்தை வாய்ப்பு, அவை அவர்களுடைய வாழ்க்கையை எப்படி முன்னேற்றியிருக்கிறது என்பதை எல்லாம் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த சந்திப்புகளின் போதெல்லாம், அந்த குழு சகோதரிகள் வைக்கின்ற கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் முதலமைச்சருடைய கவனத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதை முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக அவர்கள் என்னென்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதையெல்லாம் முடிந்த வரைக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதையெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் பட்டா, 4 மணி நேரத்தில் வீடு என்று சுய உதவி குழுக்களின் சகோதரிகள் உங்கள் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றி கொடுப்பவர்தான் முதலமைச்சர்.

முதலமைச்சரின் இலக்கு!

மகளிருக்கான குழு அடையாள அட்டை கொடுக்கப்பட இருக்கின்றது. மகளிர் தினத்தன்று முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். அந்த அடையாள அட்டை இருந்தால் நீங்கள் தயாரிக்கின்ற அந்த பொருட்களை கிராமம் மற்றும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்து செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி கொடுத்தவர் முதலமைச்சர்.

இந்த கோரிக்கையும் திருவாரூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சகோதரிகள் வைத்த கோரிக்கை தான். இதை முதலமைச்சரிடம் சொன்னவுடனே, இதை செய்து கொடுங்கள் என்று கூறினார். விரைவில் அந்த அடையாள அட்டை உங்களுக்கெல்லாம் கொடுக்கப்பட இருக்கின்றது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், மகளிர் குழுக்கள் என்ன உதவியை கேட்டாலும் உடனே செய்து கொடுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

இதையே ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் நினைத்து பாருங்கள். குறிப்பாக 2011 முதல் 2021 வரை முந்தைய ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை.

இப்பொழுது முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு ஒரு இலக்கு கொடுத்து அந்த குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

மகளிர் பங்களிப்பு!

இந்த ஆண்டு மட்டும் அந்த இலக்கு ஒவ்வொரு வருடமும் அதிகப்படுத்தப்பட்டு போயிக் கொண்டிருக்கிறது. 37,000 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று இலக்கு கொடுத்திருக்கிறார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு மட்டும் சுமார் 3,76,000 பயனாளிகளுக்கு 3,130 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் ஒரே நாளில் மட்டும் கொடுக்கப்பட இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1,05,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் இணைப்புகளை திமுக அரசு வழங்கி இருக்கின்றது.

இன்றைக்கு, மகளிர் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தான் இந்தியாவிலேயே 9.69 சதவீதம் வளர்ச்சியோடு, தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்கு உங்களுடைய உழைப்பு, பங்களிப்பு, மகளிருடைய பங்களிப்பு இல்லாமல் இந்த வளர்ச்சி நிச்சயம் தமிழ்நாட்டிற்கு சாத்தியம் கிடையாது.

ஆகவேதான், நேற்று ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசும்போது கூட குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டு பொருளாதாரத்துடைய முதுகெலும்பாக நம்முடைய மகளிர் நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்று பெருமையாக பேசினார்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share