சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அபிராமிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், தனது படிப்பு தொடர்பான ‘புராஜெக்ட்’ பணிக்காக கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். அவர் அடையார் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி தனது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
மாணவி சென்னை வந்த சில நாட்களிலேயே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து கேட்டபோது, “இந்த புகைப்படங்களை உனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி விடுவேன்” என அந்த நபர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி, மாணவி தனது பணிக்காக ஆன்லைன் செயலி மூலம் கார் புக் செய்துவிட்டு காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு காரில் இருந்த அடையாளம் தெரியாத கும்பல் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளது. காரில் சென்றுகொண்டிருந்தபோதே மாணவியின் முகத்தில் மயக்க மருந்து தெளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மயக்க நிலையிலிருந்த மாணவியை வேறொரு இடத்தில் இறக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியுள்ளது.
மயக்கம் தெளிந்த பிறகு தனது உடலில் மாற்றங்கள் இருப்பதை உணர்ந்த மாணவி, மார்ச் 10ம் தேதி அடையாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்குப் பின் அவர் வெளியே வந்தபோது, மீண்டும் காரில் வந்த மூன்று பேர் அவரிடம் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளனர். நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால், மார்பிங் செய்த புகைப்படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை:
இந்தக் கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நேற்று அபிராமிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கி உளளனர்.
சென்னையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
