ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். terrorist attack on tourist in kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பகுதி மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.
இந்த பகுதியில் இன்று (ஏப்ரல் 21) ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர். இங்கு நடந்தோ அல்லது குதிரையிலோ தான் செல்ல முடியும். இந்தநிலையில் அங்கு வந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இன்னும் எத்தனை பேர் உயிரிழந்தனர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் இந்த தாக்குதலின் போது, ஒரு பயங்கராவதி வந்து ஒரு சுற்றுலா பயணியிடம் மதம் குறித்து கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து அந்த நபரின் தலையில் சுட்டதாகவும் அவரது மனைவி கூறியிருக்கிறார்.
இந்த தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண் ஒருவர், தயவு செய்து எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறும்” வீடியோவும் இணையத்தில் வெளியாகி காண்போரை கண் கலங்கச் செய்கிறது. மற்றொரு பெண் இறந்து கிடக்கும் தனது கணவர் அருகில் அமர்ந்து செய்வதறியாது இருக்கிறார். சிலர் மொழி புரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றனர்.
தற்போது பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய டெல்லியில் இருந்து விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகர் விரைந்துள்ளார். terrorist attack on tourist in kashmir