தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் இன்று (மார்ச் 14) மூன்று இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் சுட்டெரிக்கிறது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 100.58 டிகிரி, பரமத்தி (கரூர்) மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “
14-03-2026 மற்றும் 15-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
16-03-2026 முதல் 18-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
14-03-2026 மற்றும் 15-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கக்கூடும்.
16-03-2026 முதல் 18-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
மழை
தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நீலகிரி மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
