நீட் தேர்வுக்கு ‘நோ’… டெட் தேர்வுக்கு ‘யெஸ்’: திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு? கொதிக்கும் ஆசிரியர்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Teachers dissatisfied with the double stance of DMK

“மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடவே கூடாது; ஆனால், வாத்தியார் வேலைக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயம்!” – இதுதான் தற்போது தமிழக ஆசிரியர்கள் மத்தியில் ஒலிக்கும் மிக முக்கியமான குமுறல். நீட் (NEET) தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் திமுக அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் மட்டும் கறாராக இருப்பது ஏன் என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நீட் எதிர்ப்பு ஏன்?

ADVERTISEMENT

“கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைக்கிறது. வெறும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே மருத்துவச் சேர்க்கைக்குப் போதுமானது” என்பதே தமிழக அரசின் ஆணித்தரமான வாதம்.

இதற்காகச் சட்டப் போராட்டங்களையும், சட்டமன்றத் தீர்மானங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. “சமூக நீதி” என்ற அடிப்படையில் நீட் தேர்வை எதிர்ப்பது சரிதான்.

ADVERTISEMENT

அப்படியென்றால் டெட் (TET) ஏன்?

இங்கேதான் விவகாரம் சூடுபிடிக்கிறது. மருத்துவப் படிப்புக்குத் தகுதித் தேர்வு (NEET) தேவையில்லை என்று சொல்லும் அதே அரசு, ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்றும், அதுபோக நியமனத் தேர்வு (UGTRB) என்ற இன்னுமொரு போட்டியையும் நடத்துவது எந்த வகையில் நியாயம்? என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ADVERTISEMENT

“உயிரைக் காக்கும் மருத்துவர் பணிக்கு +2 மதிப்பெண் போதும் என்கிறீர்கள். ஆனால், அறிவைக் கொடுக்கும் ஆசிரியர் பணிக்கு மட்டும், ஏற்கனவே படித்துப் பட்டம் பெற்றவர்களை மீண்டும் மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம்?” என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் வாதம்.

வாக்குறுதி என்னாச்சு?

தேர்தல் அறிக்கையில், “தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்று வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு “கல்வியின் தரம் (Quality of Education) முக்கியம்” என்று கூறி, டெட் தேர்வை கட்டாயமாக்குவது ஆசிரியர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சமூக நீதி எங்கே?

நீட் தேர்வில் எப்படிப் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்கும் வசதி படைத்தவர்களே தேர்ச்சி பெறுகிறார்களோ, அதே நிலைதானே டெட் தேர்விலும் இருக்கிறது? கிராமப்புறங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், இந்தத் தேர்வால் பணி வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது.

முக்கியக் கேள்வி:

“மருத்துவத்திற்கு ஒரு நியாயம்… ஆசிரியர் பணிக்கு ஒரு நியாயமா?”

நீட் விவகாரத்தில் மத்திய அரசுடன் மல்லுக்கட்டும் தமிழக அரசு, டெட் விவகாரத்தில் மட்டும் மத்திய அரசின் (NCTE) விதிகளைக் காரணம் காட்டுவது ‘இரட்டை வேடம்’ (Dual Stance) என்று விமர்சிக்கப்படுகிறது. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், ஆசிரியர்களின் இந்த அதிருப்தி திமுக அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share